Ad Widget

ஜனாதிபதிக்கு பில்கேட்ஸ் புகழாரம்!

இலங்கையில் சமூக – பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள முதலீடு மற்றும் முயற்சிகளை பாராட்டியுள்ள மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய உலகத் தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரியெனவும் தெரிவித்துள்ளார்.

bil-gates-micro-soft

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கையின் ‘நனசெல’ நிகழ்ச்சித் திட்டம், கிராமிய மட்டத்திற்குரிய மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப செயற்திட்டத்திற்கான விருதினை. பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் மன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி பிரான்ஸ், லியோனில் மன்றத் தலைவர் பில் கேட்ஸ் தலைமையில் நடைபெற்றது.

விருதை வழங்கிய பின்னர் அவர் சர்வதேச நூலகர்கள் மற்றும் கல்விமான்கள் முன்னிலையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியின் போது முகம் கொடுக்க வேண்டிய சவால்களுக்கும், மக்களின் வாழ்க்கை தரத்தில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் தகவல் தொழில்நுட்பமே அசாதாரண சக்தியை கொண்டுள்ளதென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் நன்கு புரிந்து வைத்துள்ளதாகவும் பில்கேட்ஸ் கூறினார்.

வசதி குறைந்த மக்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புகளை பாராட்டிய பில்கேட்ஸ், இதுபோன்ற சிறந்த தலைமைத்துவம் மேற்படி முக்கியமான துறைக்கு இன்றியமையாதது எனவும் கூறினார். இதனை ஏனைய உலகத் தலைவர்கள் முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Posts