ஜனநாயக வழிமுறையின் ஊடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வேலணையில் நேற்றய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அறுபது வருடகாலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமது மக்கள் எதிர்காலத்திலும் ஏமாந்து விடக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அந்தவகையில், தமிழ் தலைமைகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் எமது மக்கள் மாற்றத்தையும் ஏற்றத்தையும் காணமுடியும்.
கடந்தகாலங்களில் கிடைக்கப் பெற்ற பல சந்தர்ப்பங்களை தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களினால் எதனையும் செயற்படுத்த முடியாத நிலையிருந்தது. அவர்கள் வெறும் வெற்றுக் கோசங்களையும் உணர்ச்சிப் பேச்சுக்களையும் பேசி மக்களை ஏமாற்றினார்களேயொழிய வேறு எதனையும் செய்யவில்லை. நாம் நீண்டகாலமாக ஜனநாயக வழிமுறையின் ஊடாகவே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்பதை வலியுறுத்தி வருகின்றோம்.
அத்துடன் ஜனநாயக வழிமுறையின் ஊடாகத்தான் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்பதே எமது நிலைப்பாடாகும்.ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்ததாக கூறிக்கொள்ளும் சுயலாப அரசியல் வாதிகள் மக்களுக்காக எதனைச் செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண சபைக்கு அதிகளவிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முடிந்த போதிலும் அதனை அவர்கள் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) உடனிருந்தார்.