Ad Widget

ச.லலீசன் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா?? – கல்வி அமைச்சு விசாரணை முன்னெடுப்பு!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக் கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்பதாக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு விளக்கமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவுக்கான மேலதிக செயலர் சீ.சமந்தி வீரசிங்கவால் கல்வி அமைச்சின் ஆசிரியர் பயிற்சிக் கல்விப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த பட்டிமன்றம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? உள்ளிட்டவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரணைகளை முன்னெடுக்கிடுமாறும் கல்வி அமைச்சு , மானிய ஆணைக்குழுவிற்கு பணித்துள்ளது

Related Posts