Ad Widget

சைபர் குற்றம் : இலங்கையில் ஆண் சிப்பாய்களை மிஞ்சும் பெண் சிப்பாய்கள்

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் கடமையாற்றும் ஆண்கள் மட்டுமன்றி பெண் சிப்பாய்களும் சைபர் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அண்மையில் கொழும்பின் தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் 23வயதான யுவதியொருவர், தனது முன்னாள் காதலனான விமானப்படை பொறியியலாளர் ஒருவர் தனது நிர்வாணப் படங்களை வைத்து மிரட்டிக் கொண்டிருப்பதாக குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விமானப்படை பொறியியலாளரிடம் சுமார் 30க்கும் மேற்பட்ட அழகான யுவதிகளின் அரைநிர்வாண, நிர்வாணக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டிருந்தது.

இவ்வளவுக்கும் குறித்த விமானப்படை பொறியியலாளருக்கு தற்போது 24 வயது கூட நிரம்பியிருக்கவில்லை. இவர் ஒரு நண்பர்கள் குழுவை வைத்துக் கொண்டு அவர்கள் ஊடாக அழகான பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களின் அரைநிர்வாண , நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து மிரட்டி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த யுவதிகளின் அலங்கோல புகைப்படங்களைப் பயன்படுத்தி குறித்த பொறியியலாளரின் நண்பர்களும் யுவதிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த விமானப்படை பொறியியலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இராணுவப் பிரிவொன்றில் பணியாற்றும் அழகான பெண்ணொருவர் தனது கணவரின் துணையுடன் இளம் சிப்பாய்களை அச்சுறுத்தி பணம் கறந்துள்ள சம்பவம் ஒன்று குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்பெண் புதிதாக இராணுவத்தில் இணையும் இளம் சிப்பாய்களை தனது நட்பு வலைக்குள் வீழ்த்தி, அதன் பின்னர் குறித்த சிப்பாய்களின் நிர்வாணப் புகைப்படங்களை ஈமெயில் வாயிலாக தருவித்துக் கொண்டுள்ளார்.

பின்னர் குறித்த இளம் சிப்பாய்களை தொடர்பு கொள்ளும் பெண் சிப்பாயின் கணவர், தனது மனைவிக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பிய விடயம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு கணிசமான தொகையொன்றை தருமாறு மிரட்டி பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்தச் சம்பவம் குறித்தும் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts