வன்னிப் பகுதியில் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்த தகுதியுடைய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் புதன்கிழமை (04) தெரிவித்தார்.
வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த, தகுதியுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையிலான இடமாற்ற கடிதங்கள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி, சகல கல்வி வலய பிரதிநிதிகளிடமும் நேரடியாகக் கையளிக்கப்படும்.
இவர்களின் இடமாற்றத்தால் ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதிதாக நியமிக்கப்படவிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்பப்படவுள்ளனர். வன்னி பகுதியிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வியமைச்சில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற, இடமாற்றத்துக்கு தகுதியுடைய ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டு, இடமாற்றம் பெறவுள்ள ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்.ராஜேந்திரன் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என கஜதீபன் கூறினார்.