Ad Widget

செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேரும் விடுவிப்பு

kajenthiranகைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடகவியலாளர் உட்பட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் மற்றும் 6 பெண்கள் உட்பட 15 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் கேட்டறிந்தார்.

சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தப்பட்டமை, தமிழின படுகொலை என எழுதப்பட்ட பதாகை கூட்டத்தில் வைக்கப்பட்டமை,மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் வைத்திருந்தமை தொடர்பான குற்றத்திற்காகவே தாம் அவர்களை கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்கம் தெரிவித்திருந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களையும் அன்றையதினம் இரவு 7 மணியளவில் பொலிஸார் விடுதலை செய்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ,தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோ உட்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் 9 பேரூம் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர்கள் புலனாய்வுத்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட விசாரனையையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குறித்த 9 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.

Related Posts