Ad Widget

செய்தியை செய்தியாகப் பிரசுரியுங்கள்: சி.வி.கே

செய்தியை செய்தியாக பிரசுரியுங்கள் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று வியாழக்கிழமை (25), கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

‘கடந்த மாகாண சபை அமர்வின் போது ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் கூறாத கருத்து ஒன்று பத்திரிக்கை ஒன்றில் பிரசுரமாகி இருந்தது. அது தொடர்பில் என்னிடம் இருந்த அன்றைய மாகாண சபை அமர்வின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை பரிசீலித்த போது குறித்த மாகாண சபை உறுப்பினர் அவ்வாறு எந்த கருத்தையும் கூறவில்லை. அது குறித்து உறுப்பினரிடம் கேட்ட போது தான் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்து இருந்தார்.

உறுப்பினர் கூறாத கருத்தொன்றை பத்திரிகை ஒன்று உறுப்பினர் தெரிவித்தார் என பிரசுரித்து உள்ளது. தயவு செய்து ஊடகவியலாளர்கள் இங்கே நடக்கும் கூறும் விடயங்கள் தொடர்பில் செய்திகளை பிரசுரியுங்கள். இது கௌரவமான சபை. இது உங்கள் சபை. என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செய்திகளை பிரசுரியுங்கள் என கேட்டுக் கொண்டார்.

Related Posts