யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.
அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.
இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும்,கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன.
இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.
இந்நிலையில் , திங்கட்கிழமை (02) மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சேராக காணப்பட்டமையால், பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.