Ad Widget

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் 260,000 வேலைவாய்ப்புக்கள்

இலங்கையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் 2 இலட்சத்து 60ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகி வருவதாக யாழ் கிறீன் கிறாஸ் ஹொட்டேலின் முகாமையாளரும், விருந்தோம்பல் முகாமைத்துவத்துறை விரிவுரையாளருமான கார்த்திகன் தெரிவித்தார்.

சிகரம் அக்கடமி விருந்தோம்பல் முகாமைத்துவப் பிரிவி்ன் ஏற்பாட்டில் யாழ் ஞானம்ஸ் ஹொட்டேலில் கடந்த மார்ச் 31ம் திகதி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

சிகரம் நிறுவனப் பணிப்பாளர் கோ.றுஷாங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

2016ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், இந்த எண்ணிக்கையை 2020இல் 4 மில்லியன் ஆக்குவது என்று இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபை தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு, இலங்கைக்கு அதிகரித்த எண்ணிக்கையில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து, உள்நாட்டு ஹொட்டேல்கள் மாத்திரமன்றி பல வெளிநாட்டு ஹொட்டேல்களும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த காரத்திகன்,

இந்த ஹொட்டேல்களில் பணியாற்றுவதற்கு அதிகளவு எண்ணிக்கையான பணியாளர்கள் தேவைப்படுவதாகக் கூறினார்.

4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது, அவர்களுக்கு சேவையாற்ற இலங்கையில் தற்போதிருக்கும் பணியாளர்களுக்கு மேலதிகமாக பயிற்சிபெற்ற 2 இலட்சத்து 60 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுவாரகள் என்று சுற்றுலாத்துறை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த அரிய வாய்ப்பை வடக்கு மாகாண இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் முறையான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டால் அதிகளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் கிறீன் கிறாஸ் முகாமையாளரும், விரிவுரையாளருமான கார்த்திகன் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், ஜெற்விங் ஹொட்டேல் முகாமையாளர் கிறிஸ்ரோஃபர் பொன்னுத்துரை, உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ஷெரட்டன் ஹொட்டேல் வலைப்பின்னலில் 15 நாடுகளில் 30 வருடங்கள் பணியாற்றிய யாழ்ப்பாணத்தவரான விக்கி சுப்பிரமணியம், வலம்புரி ஹொட்டேல் அத்துல, ஜெற்விங் ஹொட்டேல் உணவு குடிபானவகை பிரிவு முகாமையாளர் கங்கை அமரன் ஆகியோரும், ஹொட்டேல் தொழில்துறை பற்றி மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கினர்.

சிகரம் அக்கடமி விருந்தோம்பல் கற்கைப் பிரிவில் பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பயிற்சியை நிறைவுசெய்து ஹொட்டேல்களில் பணியாற்றிவரும் மாணவர்களுக்கான விருதுகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

Related Posts