Ad Widget

சுதந்திர தினம் ; சமூகவிரோத கைதிகள் விடுதலை, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மறுப்பு

ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சில சமூகவிரோத கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பின் அடிப்படையில், இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை செய்யக்கூடிய கைதிகளின் பெயர் பட்டியல் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தங்களது விடுதலை தொடர்பில் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்கள் எதுவும் விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கைதிகள் பட்டியலில் இடம்பெறவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts