Ad Widget

சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்டச் செயலரின் ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானது.

மிகக்குறுகிய காலத்திலேயே மழைவீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கின்றது.

வயல் நிலங்கள் பலவும் வெள்ளப் பாதிப்புக்குள்ளனதாக அறியமுடிகின்றது. வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவைத் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இந்த தரவுகள் கிடைத்திருக்கின்றன.

எவ்வாறிருப்பினும் 86 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்கள் என்றவகையிலே 6 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில் 92 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கால நிலை சீரடைந்து வருவதன் காரணமாக நாளைய தினம் (11-11-2021) பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என நான் கருதுகின்றேன்” என்றார்.

Related Posts