யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் இணைத்தலைவர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகிய மூவருமே இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மேற்படி இணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டிருந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியினால் நேற்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு மாவட்ட அபிவிருத்தியை திட்டமிடல் மற்றும் கண்காணித்தல் பணிகளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.