Ad Widget

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் நிராகரிப்பு

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது.

north-provincial-vadakku-npc

இதன்போது, சிவாஜிலிங்கம், ஜக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் காலத்தை நீடித்தல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்து சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் போன்ற பிரேரணைகள் கொண்டு வரப்படவிருந்தன.

இந்தப் பிரேரணைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பிரேரணைகள் என்பதால் இவற்றை ஏற்க முடியாது எனவும் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை ஏற்க முடியாது எனவும் கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரேரணைகள் எவ்விதத்தில் அதற்கு உதவியாகவிருக்கும் என்பது தெரியவில்லையென முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இதனை, அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டு மூன்று பிரேரணைகளையும் நிராகரித்தார். அத்துடன், அதில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்து சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரேரணையும் தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து அடுத்து அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவைத் தலைவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, வெளிநடப்புச் செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அவை அமர்வில் கலந்துகொண்டனர். இருப்பினும், அங்கஜன் இராமநாதன் மட்டும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாமல் வீடு சென்றுவிட்டார்.


மேலும் வடமாகாணசபை செய்திகளுக்கு..

Related Posts