Ad Widget

சிறுமிகள் துஷ்பிரயோகம்: புலிகளைத் தொடர்புபடுத்திக் காட்டுகின்றார் பிரதமர் ஜயரட்ன

“காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.”

இவ்வாறு காரைநகர் சம்பவத்துடன் புலிகளைத் தொடர்புபடுத்தி நேற்று நாடாளுமன்றில் பேசியுள்ளார் பிரதமர் டி.எம். ஜயரட்ன.

dm-jayarathna

“இந்தியா உட்பட உலகில் தினமும் எத்தனையோ வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனினும், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறிய சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்திற்கு பெரிதுபடுத்திக்காட்டுவதற்கு முயற்சிக்கிறது” என்றும் இதன்போது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. விடுத்த விசேட கூற்றுக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காரைநகர் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கடந்த 15ஆம் திகதி காலை 7 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமியொருவரை காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதன்போது தாயார், மகள் நேரகாலத்துடன் பாடசாலை விட்டு வந்தமை தொடர்பில் அதிபரிடம் வினவியுள்ளார்.

தினமும் மகள் இவ்வாறு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி அக்காலப்பகுதியில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். வைத்தியசாலைப் பொலிஸார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 9 கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இரண்டுபேர் விடுமுறை எடுத்திருந்ததால் 7 பேரே அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் எவரையும் சம்பந்தப்பட்டவர் அடையாளம் காட்டவில்லை. அதன்பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, இதுபோல் பல சம்பவங்கள் இந்தியா உட்பட உலகெங்கும் தினமும் இடம்பெறுகின்றன. ஆனால், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவத்தை பெரிதுபடுத்தி சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது” – என்று பிரதமர் ஜயரட்ன தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

சிறுமிகளை வன்புணர்ந்த கடற்படைச் சிப்பாய்களை உடன் கைதுசெய்க! – நாடாளுமன்றில் சம்பந்தன்

Related Posts