Ad Widget

சிறுத்தை கொலை: வனஜீவராசிகள் திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமே கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சிறுத்தையை உயிரிடன் மீட்கும் தமது பணிக்கு கிராமத்தைச் சேர்ந்த சிலர் இடையூறு விளைவித்தனர் எனவும் அரியவகை வன விலங்கை சித்திரவதைக்குட்படுத்தி சிலர் அடித்துக் கொண்டனர் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அதன் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தமது குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவை ஆராய்ந்த கிளிநொச்சி நீதிவான், காணொலி ஆதாரங்களை விசாரணை செய்து சிறுத்தையை துன்புறுத்திய மன்றும் அடித்துக் கொலை செய்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டார் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பத்துக்கும் மேறபட்டவர்களைத் தாக்கியது. அதில் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

மக்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் வெளியேறியதையடுத்து, சிறுத்தையை சிலர் அடித்துக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts