Ad Widget

சிறு­மி­கள் மீது பாலி­யல் சேட்டை – வட்டுக்கோட்டை ஆசி­ரி­ய­ரின் மறி­யல் நீடிப்பு!

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பிணை வழங்குவதா இல்லையா? என்ற கட்டளை வழங்குவதை மல்லாகம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது.

அதனால் ஆசிரியரின் விளக்கமறியல் வரும் 14ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, அன்று பிணை விண்ணப்பம் மீதான கட்டளை வழங்கப்படும் என்று இன்று அறிவித்தார்.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபர் சார்பில் கடந்த தவணையின் போது பிணை விண்ணப்பம் முன்வைக்கப்பட்டு அவரது சட்டத்தரணியால் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தி.அர்ஜூனா, ஆசிரியரைப் பிணையில் விடுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிணை விண்ணப்பம் மீதான கட்டளை நேற்று 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் என மல்லாகம் நீதிவான் நீதிமன்று அறிவித்திருந்தது.

சந்தேகநபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். எனினும் பிணை விண்ணப்பம் மீதான கட்டளையை தயார்படுத்தவில்லை என அறிவித்த மன்று, சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 14ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டது.

Related Posts