சாவகச்சேரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்று (புதன்கிழமை) முன்னெடுத்தனர்.
தென்மராட்சி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளிக்களப்பணியில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நாவற்குழியில் வைத்து அங்கிருந்த சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே கடமையின் போது உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டிப்பதோடு, குறித்த உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.