சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்கும் பொருட்டு 5 சுகாதார திட்டங்கள் செயற்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பிரதேச சுகாதார குழுத்தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோர் இன்று வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.
திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (25) நடைபெற்ற சுகாதார குழுக்கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள உணவகங்களுக்கு தரச்சான்றிதழ்கள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளல். உலக கைகழுவல் தினத்தை முன்னிட்டு அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடல்.
சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பராமரிப்பின்றி இருக்கும் காணிகளை துப்பரவு செய்யவேண்டும் என்பது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்.
குறிப்பிட்ட காலத்திற்குள் துப்பரவு செய்யாவிடின் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல். இதன்மூலம் சாவகச்சேரி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருத்தல்.
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள மக்களுக்கு அனர்த்தங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தல், மற்றும் அனர்த்தங்களின் போது எவ்வாறான செயற்பாடுகளை பின்பற்றுதல், பாதுகாப்படைதல் போன்றவை தொடர்பில் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கல்.
சாவகச்சேரி பிரதேசத்தில் தற்போது பெருகியுள்ள இலையான்களை இல்லாது ஒழிப்பதற்கு மருந்து விசிறப்பட்டு, தொற்றுநோய்கள் ஏற்படாத சூழலை ஏற்படுத்தல். ஆகிய ஐந்து சுகாதார நடைமுறைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.