Ad Widget

சாரணியம் இயற்கையை நேசிக்கக் கற்றுத்தருகிறது: பொ.ஐங்கரநேசன்

சாரணர்களின் பாசறை நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஏராளமான விடயங்களை இளவயதிலேயே கற்றுத்தருகின்றன. பாடசாலையை விட்டு வெளியே இயற்கைச் சூழலில் நடாத்தப்படும் பாசறைகள் மாணவர்களிடையே இயற்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி, இயற்கையை நேசிக்கக் கற்றுத் தருகிறது என்று வடக்கு சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

05

யாழ் இந்துக்கல்லூரியின் சாரணர் நூற்றாண்டு விழாவையொட்டி யாழ் இந்துக்கல்லூரியின் திரிசாரணர்களால் வவுனிக்குளம் மருதங்காட்டுப் பகுதியில் ‘இந்துபோறி’ என்னும் ஐந்துநாள் வனப்பாசறை நிகழ்ச்சி கடந்த 7 ஆம் திகதியில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன், நான்காம் நாளான சனிக்கிழமை (10.09.2016) இரவு நடந்த சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்துக்கல்லூரியின் திரிசாரணர் குழு இந்துபோறியை நடாத்துவதற்கு மிகப் பொருத்தமான இடத்தையே தேர்வு செய்திருக்கிறது. ஒரு பக்கம் பரந்து விரிந்து கிடக்கும் வவுனிக்குளமும் மறுபக்கம் நெடிதுயர்ந்து அடர்ந்து நிற்கும் மருதமரங்களும் இங்கு கூடியிருக்கும் சாரணர்களை நிச்சயமாக ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் சென்றிருக்கும். இயற்கை பற்றிய இரசனை இல்லாதவர்களைக்கூட இயற்கையின் பேரழகைப் பருகவைத்து, இயற்கையை நேசிக்கக் கற்றுத்தந்திருக்கும்.

அதிகாலை குளக்கரையில்; படுத்திருக்கும் முதலைகளையும், சேற்றில் பதிந்துள்ள யானைகளின் பாதச் சுவடுகளையும், குரங்குகளையும், நரிகளையும் பலமாணவர்கள் முதற்தடவையாக இங்கு பார்த்திருக்கக்கூடும். இயற்கைச் சூழல் இதுவரையில் நீங்கள் கண்டிராத உயிரினங்களைத் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பை மாத்திரம் உங்களுக்கு வழங்கவில்லை. இயற்கை, மன அழுத்தங்களில் இருந்து எங்களை விடுவித்து மனதைச் சாந்திப்படுத்தவும், மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. இது மனதில் தீய எண்ணங்கள் குடியேறாது, நேர்வழிச் சிந்தனையை விதைக்க வழிகோலுகிறது.

மொத்தத்தில், இயற்கை என்ற பேராசான் மாணவர்களை நன் மானிடர்களாக வளர்த்தெடுப்பதற்கு ஏராளமான விடயங்களைக் கற்றுத்தரும். அந்த வகையில் மாணவர்கள் எல்லோரும் சாரணர்களாக இணைந்து கொள்வதும், இது போன்ற வனப்பாசறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பரியோவன் கல்லூரி அதிபர் என்.ஜே.ஞானபொன்ராஜா ஆகியோருடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண மாவட்டச் சாரண அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு..

Related Posts