Ad Widget

சாத்வீகப் போராட்டத்தின் மூலம் தமிழருக்கு நாம் விடிவைப் பெற்றுக்கொடுப்போம்! – மாவை

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சாத்வீகப் போராட்டத்துக்கு தயாராகிவிட்டோம்.அறவழிப் போராட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்பது மிக முக்கிய தீர்மானமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறுகின்றேன். – இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

mavai mp in

தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் பேராளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது.

இதில் தலைமை தாங்கி உரையாற்றும்பேதே அவர் இதனைத் தெரிவித்தார். நீண்ட உரையை ஆற்றிக்கொண்டிருந்த மாவையின் குரல் திடீரென ஸ்தம்பித்தது. அவர் தொடர்ந்து பேசமுடியாமல் அவஸ்த்தைப்பட்டு தனது ஆசனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து அவரது உரையைக் கட்சிப் பிரதிநிதி ஒருவர் வாசித்தளித்தார்.

அந்த உரையின் முழுவிவரம் வருமாறு:-

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆறாவது தேசிய மாநாடு 1958 ‘மே’ 25 ஆம் திகதி வுனியாவில் நடைபெற்றதன்பின் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த 1949 ‘மார்கழி’ 18 இல் இருந்து 64ஆண்டுகள் நிறைவில் 15ஆவது மகாநாடு மீண்டும் வவுனியாவில் வன்னி பெருநிலப்பரப்பில் நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

அதேபோல எம் தமிழ் மக்களும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். தந்தை செல்வாவின் சுவடுகளிலிருந்து 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பொழுதும், வன்னிநிலப்பரப்பை ஆண்ட பரம்பரை ஆட்சியை நிலைநாட்ட 200ஆண்டுகளுக்கு மேலாக 1811வரை ஐரோப்பிய ஆதிக்கத்திற்கெதிராக, ஆங்கில ஆட்சிக்கெதிராக வீரத்துடன் போராடிய கைலை மன்னனும், பண்டார வன்னியனும் வாழ்ந்து அரசோச்சிய- வீரமறவர் போராடிய- மண்ணில் அடங்காப்பற்று அந்தச் சுதந்திர தாகங்கொண்ட வன்னி நிலப்பரப்பில் தமிழரசு மாநாடு நடைபெறுகிறது.

கற்சிலை மடுவுக்குப்பின் “முள்ளிவாய்க்கால்” வரை சிங்கள பேரினவாதத்திற்கு, மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடி வீரத்தின் விளை நிலமாகவும் விடுதலைக்கு இலட்சஇலட்சமாய் இலட்சியத்திற்கு உயிர் கொடுத்த வீரமண் அந்த ஆத்மாக்களின் ஆன்ம ஓலம் ஒலித்துக் கொண்டும் எம் பொறுப்பை – கடமையை உணர்த்திக் கொண்டும் நிற்கும் சிவந்த தமிழ் நிலத்திலிருந்து இம் மாநாட்டை நடத்துகிறோம்.

1956ஆம் ஆண்டு தனிச்சிங்களம் ஆட்சிமொழிச் சட்டம் பண்டாரநாயக்கவினால் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராக காலிமுகத்திடலிலே தந்தை செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பின் “திருமலைக்குச் செல்வோம் சிறுமை அடிமை வெல்லுவோம்” என்று 1956 ஓகஸ்ட் 17ஆம் திகதி திருமலை மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டிலே எடுக்கப்பட்ட தீர்மானம், “1957ஆம் ஆண்டு ஆவணி 20ஆம் திகதிக்கிடையில் பிரதம மந்திரியும் அரசும் இலங்கையில் சமஷ்டி அரசமைப்பில் தமிழர் தேசத்தில் தன்னாட்சியை நிறுவும் நடவடிக்கையை எடுக்கத்தவறின் அவ்விலட்சியத்தை அடைவதற்குச் சாத்வீக வழியில் கட்சி நேரடி நடவடிக்கையில் இறங்கும்” எனும் போராட்டத் தீர்மானம் அறிவித்தபின் 1957 – 07 – 26 இல் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஓரளவு சுயாட்சி, நிலவுரிமை நிலைநாட்டப்பட்டது. 1958 ஏப்ரல் 08 ஆம் திகதி அந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்கிறார் என்று பண்டாரநாயக்கா அறிவித்தார். அதற்குப் பின்தான் 1958 ”மே” மாதத்தில் 25ஆம் நாள் வவுனியாவில், இந்த வன்னி நிலப்பரப்பிலே அந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு போல் இம்மாநாடும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே.இந்த மாநாட்டிலே எடுக்கப்படும் தீர்மானம் இலட்சிய தாகத்தால் முன்னெடுக்கும் போராட்ட அறிவிப்பு முன்வைக்கப்படுமென்பதும் முக்கியமானதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு அறவழிப் போராட்டத்திற்கான திகதி அறிவிக்கப்படும் என்பது மிக முக்கிய தீர்மானமாக இருக்கும் என அறுதியிட்டுக் கூறுகின்றேன். அந்த பொறுப்பைக் கையேற்பதற்காகத்தான் நான் உங்களால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள தலைமைப் பொறுப்பை ஏற்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வன்னி நிலப்பரப்பில் மேற்கே 5000 ஆண்டு வரலாற்றைப் பிரதிபலித்து ஐந்து ஈஸ்வரங்களில் முக்கியமான திருக்கேதீஸ்வரமும், பாலாவி ஆறும் அமைந்துள்ளதும் வரலாற்றை ஆராய்ந்துள்ள அறிஞர்கள் இந்துமாக்கடல் வங்களாவிரிகுடா உருவாகுவதற்கு காரணமாய் இருந்தபிரளயம் வருவதற்கு முன் பொதிகையில் பிறந்த தாமிரபரணி ஆறு பாலாவி வரை பெருகியிருந்ததெனக் கூறியுள்ளனர்.

இன்று தமிழகக் கடலோரத்தில் அதே தாமிரபரணி வீழ்ந்து வருகிறது. நாம் கடலால் பிரிக்கப்பட்டுள்ளோம். அதேபோல நாம் சிங்களத்திலிருந்து மனதால் பிரிக்கப்பட்டிருக்கிறோம். விடுதலைக்காய் போராட விதி கொண்டிருக்கிறோம். மன்னார் கடல் எங்கள் நிலத்தின் எல்லையோரத்தில் ஆழமற்றதும் மட்திடல்கள் தெரிவதுமாய் புதிய சூழ்நிலைகளில் முத்து முதல் எண்ணெய் வரை கடல் வளமும் வேளாண்மை வளம் முதல் பல வளங்கள் கொழிக்கும் பிரதேசம். அத்தோடு மடுமதா திருக்கோவில் உருவாகி மறைமாவட்டமாய் விளங்குகிறது. அந்த பூமியிலே ரோமபுரியிலிருந்து பாப்பரசர் 2015 தைத்திங்களிலே காலடிவைக்கும் பரவசம் மதவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களின் ஆன்மம் பூரிக்கும், விடுதலைத் தாகமிக்க எம்மக்களின் இதயத்திற்கு ஆறுதலும் எதிர்காலமும் உண்டென்று நம்பிக்கையும் கொடுக்கும் மறைநிலப்பரப்பாயும் விளங்குகிறது. மன்னார் கடலில் முத்தெடுக்க மச்சான் மண்டைக்கயிறு பிடித்து வாழ்வும் வளமும் சிறந்த அந்த ஆழியை அடுத்து ஏர்பிடிக்கும் வேளாண்மையும் விளைச்சலும் நிறைந்து எதிர்காலம் வளமாய் விளங்கும், உழைப்போர் பெருநிலப்பரப்பாய் திகழும் கிழக்கே, வவுனியா நகரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது சிறப்பானதேயாகும். தமிழர் வீரத்தின் விளைநிலமாய் கற்சிலைமடுவும் பனங்காமமும் பின் முள்ளிவாய்க்காலும் தியாகத்தின் சுவடுகளும் அதன் பின்னனியில் வற்றாப்பளை அம்மன் திருவருளும் கூடிய முல்லை நிலத்தின் பல துறை வளமும் இணைந்திருக்கும் வன்னி நிலப்பரப்பிலே “மீண்டும் போராடுவோம்” என்று எழுச்சி மிகு தீர்மானத்தை எடுப்பது தீர்க்கமாய் பொருத்தமாய் இருக்கிறது.

சர்வதேச இராஜதந்திர சந்தர்ப்பமும், குறிப்பாக இந்தியாவின் புதிய அரசின் சந்தர்ப்பமும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளின் பயனுள்ள உழைப்பும் கைகூடியுள்ள இச்சந்தர்ப்பத்தைப் பற்றி நின்று இம்மாநாட்டில் பொருத்தமான இலக்கை எய்துவதற்கான இலட்சியம் நிறைந்த தீர்மானங்களை எடுப்போம் என அழைப்பு விடுக்கின்றேன்.

தந்தை செல்வநாயகத்தின் சுவட்டிலிருந்து “அமிர் அண்ணன்”, தளபதி அமிர்தலிங்கம், யாழ்ப்பாணத்தில் மல்லாகத்திலே 12ஆவது தமிழரசு மாநாட்டிலே “இத்தாலியின் கரிபால்டி அழைத்ததுபோல் இளைஞர் சமுதாயத்தை போராட்டத்திற்கு அழைக்கிறேன்” என்ற தலைவனின் பாசறையிலிருந்தும் தமிழர் நிலம் எங்கணும் சிங்களச் சிறைகள் பலவும், என் வியர்வையும் இரத்தமும் சிந்தி உயிரே போய்விட்டதென்று தூக்கி வீசப்பட்டு உயிர் மீண்ட சந்தர்ப்பங்களினதும் அனுபவங்களினதும் ஒரு தொண்டனாக பக்குவம் பெற்ற சமான்யனை, என்னை இன்று எம் தேசத்தின் தலைவராக விளங்கும் சம்பந்தன் அவர்களும் வடக்கு மாநிலத்தின் முதல்வர் நீதியரசரும் எம் கட்சிக் குழாத்தினரும் தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் எட்டாவது தலைமைப் பொறுப்புக்கு தொண்டனாக விளங்கும் என்னைத் தெரிவு செய்தமைக்காக எமது கட்சியின் தலைமைக்கும் உறுப்பினர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்திய தேசியக் காங்கிரஸ் நடவடிக்கைளில் தலையிடாது அஹிம்சைப் போரை நடத்திவந்த மகாத்மாகாந்தி, சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டியிட அறிவித்த பொழுது ஆபத்து வந்துவிடப்போகிறதென்று எண்ணிக்கொண்டு சீதாராம சாஸ்திரியை போட்டிக்கு நிறுத்துகிறார் ஆனால் தேசிய காங்கிரஸின் தலைவராக சந்திரபோஸ் வெற்றிபெறுகிறார். தலைமையுரையிலே “ என் தேசத்தின் தந்தை மகாத்மாவே” என்று அழைத்துப் பேசுகிறார். ஹனோயிலிருந்து படைகளை வழிநடத்திப் புறப்பட்ட பொழுதும், அவ்வாறே காந்தியை அழைத்து வீரமுடன் இந்திய நாட்டை நோக்கி நடைபோட்டார். அந்த பாரம்பரியமும் பண்பும் தொண்டனுக்கும் போராளிக்கும் தளபதிக்கும் தலைவனுக்கும் இருக்கவேண்டும்.

பெருந்தலைவனாகவோ, தளபதியாகவோ இல்லாது விட்டாலும் ஒரு நல்ல தொண்டனாக நின்று இப்பாரம்பரியத்தை, பண்பாடுகளைப் பின்தொடர்ந்து இந்த உயரிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் எமக்கு உண்டு என்ற நம்பிக்கை ஆழப்பதிந்திருக்கிறது. இந்தப் பணிக்காகவே, தொண்டுக்காகவே ஜனநாயகவிழுமியங்களையும் அறவழிக் கோட்பாடுகளையும் நிலைநிறுத்தி தமிழ்ப் பேசும் மக்களின் தமிழ் முஸ்லீம் மக்களின் விடுதலைக்கும் விடிவுக்குமான போராட்டத்தில் அனைத்துமக்களினதும் அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு எதிராக சுதந்திரத்திற்காக ஜனநாயகத்திற்காகப் போராடுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டுப் பெருமைப்படுகிறேன்.

தந்தை செல்வநாயகம் 1949 மார்கழி 18ல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வரலாற்று முக்கியம் மிக்க தலைமையுரையை நிகழ்த்தினார். 1951இல் திருமலை மாநாட்டிலே தலைமை உரை நிகழ்த்தினார். தமிழினத்தின் முஸ்லிம் மக்களின் அடிமைத்தழையை அறுத்து சமஷ்டி அரசியற் கோட்பாட்டில் தமிழ் முஸ்லிம்களின் தன்னாட்சி அரசுகளை தமிழர் தாயகப்பிரதேசங்களில் நிலைநாட்டும் கொள்கைத்திட்டத்தைப் பிரகடனப்படுத்தினார்.

அந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தான் கடந்த காலங்களிலும் எதிர்காலத்திலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு அரசியலமைப்புத்திட்டம் உருவாகினால் அதன் அடிப்படையாகவே இருக்கும் என்பதில் அறுதியாக இருக்கிறோம். இலங்கையில் தமிழன் வரலாறு 1920களிலிருந்தே கண்டியத் தலைவர்களும் கண்டிய சம்மேளனமும் இலங்கைப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக சமஷ்டி அரசியல் திட்டமொன்றை டொனமூர் மற்றும் சோல்பரி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தனர். அத்திட்டத்தின் முக்கிய அம்சமாக:-

1. வடக்கு கிழக்கு ஒரு மாநில ஆட்சி நிர்வாகம்.
2. கண்டி ஒரு மாநில ஆட்சி நிர்வாகம்.
3. தாழ் நில தெற்குப் பிரதேசம் ஒரு ஆட்சி நிர்வாக மாநிலம் என்றும் ஒன்றிலொன்று ஆதிக்கம் செலுத்தாமலும்.

இம் மூன்று மாநில ஆட்சிகளும் சேர்ந்து மத்தியில் ஒரு கூட்டாட்சியை நடத்தலாம் என்றும் பரிந்துரைத்தனர். எஸ் டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா அவர்களும் இதே எண்ணத்தையே கொண்டிருந்தார். இத் திட்டத்தை ஆதரித்து “மோர்னிங் ஸ்ரார் (Morning Star) என்ற ஏட்டில் 1920களில் தொடர்ச்சியாக நான்கு கட்டுரைகளை வரைந்தார். ஆனால் பிரித்தானிய அரசு இத் திட்டத்தை ஏற்கவில்லை. அக் காலகட்டத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக ஐரிஸ் மக்கள் ஜரிஸ் விடுதலைக்காகப் போராடி வந்தனர் என்பதையும் குறிப்பிடவேண்டும். ஐரிஸ் விடுதலைப் போராட்டம் 20ஆம் நூற்றாண்டு வரை 1000 ஆண்டுகளாக நீடித்த பின் (Morning Star) வெள்ளிக்கிழமை உடன்படிக்கையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

1948ல் இலங்கைக் குடியரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் 1948 டிசம்பரில் இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமை சட்டத்திற்கான பிரேரணை வந்த பொழுது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளினால் தமிழ் காங்கிரஸிலிருந்து தந்தை செல்வா வெளியேறினார். 1949 மார்கழி 18ஆம் நாள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வைத்து மாநாட்டின் தலைமை உரையாற்றிய தந்தை செல்வநாயகம் அவர்கள் “இலங்கையில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்கள் விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தாபனத்தை அமைக்க வேண்டும் எனும் தனி நோக்கத்துடன் நாங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். இப் போதிருக்கும் நிலையில் யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதது என்பது எமது திடமான நம்பிக்கையாகும்” என்று கூறினார். அதனை வரைவிலக்கணப்படுத்திய போது “யாம் கோருவது இதுதான்”, “ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சி சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஷ்டி அரசு இலங்கையில் ஏற்படவேண்டும்” என விளக்கமளித்தார்.

1972இல் தமிழ் மக்களுக்குரித்தான இறைமையை ஜனநாயக அடிப்படை உரிமைகளை நிராகரித்து சிறிமாவோ தலைமையிலான கூட்டமைப்பு முன்னரிலும் பார்க்க வலுவும் கடுமையும் மிக்கதான (enriched unitary constitution) ஒற்றையாட்சி அரசியலமைப்பைப் பிரகடனப்படுத்திய சந்தர்ப்பத்தினாலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டி ஏற்பட்டது. 1972ஆம் ஆண்டு அரசின் புதிய அரசியலமைப்பை எதிர்த்து இளைஞர்களின் போராட்டங்கள் தமிழர் பிரதேசமெங்கும் பரவியிருந்தது. 1973 மார்ச் 9ம் நாள் நாமெல்லாம் சிங்கள அரசினால் சிறையிலடைக்கப்பட்டோம் 2 1/2 ஆண்டுகளின் பின் விடுதலை செய்யப்பட்ட போதும் மீண்டும் சில நாட்களில் நாம் கைது செய்யப்பட்டோம். 11 தடலைகள் கைது செய்யப்பட்டு மொத்தம் ஏழு ஆணடுகள் சிறையிருந்த பாக்கியம் பெற்றேன்.

1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்களிடம் விநியோகித்துப் பிரசாரப்படுத்தினார்கள் என்பதற்காக திருவாளர்கள் அமிர்தலிங்கம், வி.என்.நவரத்தினம், துரைரத்தினம் கா.பொ.இரத்தினம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 70அண்டுகள் சிறை, சொத்துப் பறிமுதல் என்றெல்லாம் அறிவித்து (Trail At Bar) சிறப்பு நீதிமன்றம் நிறுவி வழக்கு நடத்தப்பட்டது. தந்தை செல்வநாயகம் தலைமையிலே, ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், புள்ளைநாயகம் முதலான அறுபத்தேழு வழக்கறிஞர்கள் அந்த வழக்கிலே தமிழினத்தின் சார்பில் வாதாடியிருந்தார்கள். முதலாவதாக அவசாரகாலச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை செல்லுபடியாகாது எனத் நீதிமன்றம் தீர்மானித்தது. கைது செய்யப்பட்டோர்,பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக 1977 ஏப்ரல் 13இல் சிறையிலிருந்து நானும் ஏனைய இளைஞர்களும் மீள வாய்ப்பு ஏற்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் சுதந்திர தமிழீழம் நிறுவ ஆணை வழங்கப்பட்டது. அது வல்ல தற்போது எடுத்துச் சொல்கின்ற பொருள், அந்தச் சிறப்பு நீதிமன்றத்திலே சட்டபூர்வமான, தமிழர் இறைமை தொடர்பான வரலாற்று அடிப்படையான விவாதங்களை திரு. மு. திருச்செல்வம் குழாத்தினர், அரசியலமைப்பு வல்லாளர் குழாம் முன்னெடுத்து வாதாடினர். அதில் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடவேண்டும் சுருக்கமாக குறிப்பிடுகிறேன்.

(அ) இறைமை மக்கள் பிறப்புரிமை. அது எப்பொழுதும் மக்களிடமே இருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இலங்கையின் எந்தவொரு அரசியலமைப்புக்கோ, ஆட்சிக்கோ தங்கள் சம்மதத்தைக் கொடுத்திருக்கவில்லை என்பதுதான்

(ஆ) “ஐரோப்பியர் போரிலே பறித்த சுதந்திரம், ஆங்கில அரசினால் 1948ல் இலங்கைக்கு மீள அளித்த பொழுது, தமிழ் மக்களின் சுதந்திரம் தமிழ் மக்களிடமே திரும்பிவிட்டது” என்று வாதிடப்பட்டது. நீண்ட நாட்கள் நடந்த அந்த வழக்கில் மூவர்கொண்ட அந்தச் சிறப்பு நீதிமன்றம் “இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சாசனம் பற்றிய உங்கள் விவாதங்களைக் கேட்டோம். ஆனால் இந்த சிறப்பு நீதிமன்றத்திற்குத் தீர்ப்பு வழங்கும் சட்ட வரம்பு, அதிகாரம் (No Jurisdiction) இல்லை என்று வழக்கை நிறுத்திக் கொண்டது. ஆனால் அரசு உச்சநீதிமன்றில் அந்த வழக்கைத் தாக்கல் செய்தது. சில மாதங்களில் அரசு அந்த வழக்கைத் திருப்பி பெற்றுக்கொண்டது. இப்பொழுது ஏன் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிலையை எடுத்துக்கூறுகிறேன் என்றால் தமிழ் மக்கள், தமிழர்களின் இறைமையை எந்த அரசுக்கோ, ஆட்சிக்கோ கையளிக்கவில்லை என்பதுதான். மக்கள் எப்பொழுது ஒரு அரசுக்குத் தம் இறைமையை வழங்கச் சம்மதிக்கிறார்களோ அப்பொழுததான் அந்த அரசு இறைமையுள்ள அரசாக மாறுகிறது. கனடா சஷ்டி நீதிமன்றத் தீர்ப்பு இத் தத்துவங்களின் பின்னணியிலிருந்துதான் கனடா நாட்டில் “கியூபெக்”; மக்களின் அரசியல் வேட்கைக்குத் தீர்வு காண்பதற்கு உள்ளக சுயநிர்ணய உரிமை “வெளியக சுயநிர்ணய உரிமை” எனும் பதங்கள் உள்ளீர்க்கப்பட்டிருந்தன எனலாம். இலங்கை இனப்பிரச்சினையிலும் 2003 இல் ஒஸ்லோ உடன்படிக்கையில் மேற்குறித்த தத்துவங்களும் பிரயோகிக்கப்பட்ட கொள்கை அடிப்படைகள் முன் வைக்கப்பட்டன.

தீர்வுத் திட்டங்கள் தந்தை செல்வா காலத்திலேயே 1972ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பை நீக்கிவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்க, மக்கள் ஆணை பெற்றதாகக் கூறிய சிறிமாவோ தலைமையிலான பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றி அரசியலமைப்பை உருவாக்க முயற்சித்த பொழுது அந்த சபையிலே “ ஒரு சமஷ்டி அரசியல் திட்டத்தை” தமிழரசுக் கட்சி முன்வைத்தமையை நினைவூட்டுகின்றேன். தந்தை செல்வா காலத்திலே தான் 1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுயநிர்ணயத் தத்துவத்தின் இரு எல்லையையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அடுத்து இந்திய ஆட்சியின் தலையீட்டின் பின் 1985 காலப்பகுதியில் இடம்பெற்ற திம்புப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் அப்பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட ஜனநாயக மற்றும் ஆயுதப்போராட்ட அமைப்பினரின் சம்மதத்துடன் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் 1985 “டிசம்பர்” முதலாம் திகதி இந்திய அரசிடம் கையளித்த அரசியல் திட்டம் முக்கியம் பெற்றது. அத்திட்டமும் ஒரு இணைப்பாட்சி மற்றும் தன்னாட்சித் தத்துவங்களின் அடிப்படையில் அமைந்தது. அதற்குப் பதிலளித்த ஜே. ஆர்.அரசு அத்திட்டத்தை ஏற்றல் “தமிழீழத்தை அடைந்ததற்குச் சமன்” என ஆவணம் கொடுத்தது அந்த பிரேரணையின் மூலம் இலங்கை அரசியலமைப்பு இலங்கையானது, “ஒரு கூட்டாட்சி அரசுகளின் ஒன்றியமாக இருக்கும்” (Union of States) என்ற மகுடத்துடன் தயாரிக்கப்பட்டு ஆவணமாக உள்ளது.

இந்தப் பின்னனியிற்றான் இலங்கை ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் வழிகாட்டலில் அரசும்,தமிழர் விடுதலைக்கூட்டணியும் (பீரிஸ் – நீலன் திட்டம்) தயாரித்தளித்த அரசியல் தீர்வுத்திட்டம் “ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு, அதற்குப் பதிலீடாக” “பிராந்தியங்களின் ஒன்றியம்”(Union of Regions ) என்ற அடிப்படையில் பொதுப்பட்டியலில்லாமல், தெளிவான மத்திய பிராந்தியங்களுக்கான அதிகாரப்பகிர்வுடன் ஒரு அரசியல் திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அவ் அடிப்படைத்திட்டம் ஏற்க்கப்பட்டிருந்தால் ஒரு சமஷ்டித் தத்துவத்தினால் தான் அரசியலமைப்பு உருவாகயிருந்திருக்க முடியும். நாம் முன்வைத்த திட்டமும் அணுகல் முறையும் 2011 மார்ச் 18ந் திகதி ஜனாதிபதி இராஜபக்ச குழுவினரிடம் முன் வைத்த எம்மால் முன் வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் தெளிவான திடமான ஆவணத்திலும் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஒருவார்த்தைகூட இருக்கவில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.

இதனை இராஜதந்திர வட்டாரங்களும் சர்வதேசமும் நன்கு அறியும். மத்தி அரசுக்குச் செல்லவேண்டிய 13 விடயங்களும் தன்னாட்சி மாநிலத்திற்கு தேவையான 51 விடயங்களும், தெளிவாக வழங்கப்பட்டுள்ளன.2011 தை 10ம் நாள் ஜனாதிபதி ராஜபக்~ அரசுப் பிரதிநிதி குழு நிமால் சிறிபால டி. சில்வா, பீரிஸ் குழுவிற்கும்,திரு.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்குமிடையிலான பேச்சு மேசையில் 2011 மார்ச் 18ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன் வைத்த தீர்வுத்திட்டத்திற்கான அடிப்படைத் திட்டம். இத் திட்டம் சர்வதேச இராஜதந்தரிகளுக்கும் நன்கு தெரியும் ஒவ்வொரு திங்களிலும் 20க்குக் குறையாத முக்கிய இராஜதந்திரிகள், தூதுவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தை பற்றி ஆராய்ந்தனர்.

ஓராண்டு எம் திட்டத்திற்கு பதில் தராமலே இழுத்தடித்துவிட்டு 2012 தைத் திங்களில் பேச்சு மேசையிலிருந்து அரசே விலகிவிட்டது. ஆனால் ராஜபக்ச எதற்கும் இணங்கவில்லை என்பதையும் இன்றுள்ள வலுவான இறுக்கமான ஒற்றையாட்சி அமைப்பிலும், நிர்வாக நிறைவேற்று முறை ஜனாதிபதி ஆட்சியிலும், 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முதலான விதிகள் உள்ளடக்கப்பட்ட ஒற்றையாட்சியில், அதிகாரங்களைப் பகிர்வதென்பது சாத்தியமற்றதாகும்.

இந்த ஆட்சியிடம் இனப்பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் திடசங்கற்பம் இல்லை என்பதே நாம் கொண்டுள்ள எண்ணமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் திட்டம் உண்டா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது? இதோ பாருங்கள்:-

1. 1972 ஆம் ஆண்டு மே திங்களில் புதிய அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இ.த.அ.கட்சி சார்பில் திரு.தருமலிங்கம் நா.உ அவர்களால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி அரசியல் திட்டம் எங்களிடமிருக்கிறது.

2. 1983 இலிருந்து இலங்கைப் பிரச்சினையில் பிரதமர் இந்திராகாந்தியின் தலையீட்டின் பின் 1985ல் திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் இந்திய அரசினால் பிரதமர் ராஜீவ்காந்தியினால விடுக்கப்பட்ட வேண்டுகோளின்படி, 1985 “டிசம்பர்” முதலாந்திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியினால் முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டம் அத் திட்டத்தின் முதலாவது பிரிவில் “Sri lanka that is Ilankai shall be a Union of States” “அரசுகளின் ஒன்றியம்” என்றே ஆரம்பிக்கப்படுகிறது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஜே.ஆர் அரசு 30.01.1ஐ986, அளித்த பதிலின் இறுதியில் 5.1 “This proposals are totally unacceptable that they are implemented the TULF would have all but attained Eelam”, என்று பதிலளித்தது. (1985 திட்டத்தை ஏற்றால் தமிழீழத்தை அடைந்ததாகிவிடும்)

3. 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா உடன்படிக்கையிலும் 1965 ஆம் ஆண்டு டட்லி-செல்வா உடன்படிக்கையிலும் பிராந்திய சபைகள் தன்னாட்சியை நோக்கியவையாகவும் காணி நிலத்தை நிலைநாட்டுவதாகவும் இருந்தது

4. 1989,90களில் ஜனாதிபதி பிரேமதாசவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக்குழுவில், நானும் ஒரு உறுப்பினராக இருந்துள்ளேன். அதிகாரப் பகிர்வை மையமாகக்கொண்டதொரு அரசியல் திட்டத்தை இந்திய அரசியலமைப்பை ஒத்ததாக அரசியல் திட்டத்தினால் தீர்வு காணவேண்டும் என மங்கள முனசிங்க சிபார்சு செய்திருந்தார்.

5. 1995 ஆகஸ்ட்டில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க பீரிஸ் – நீலன் அரசியல் திட்டத்தின் முதற் பிரிவில் “ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு, “பிராந்தியங்களின் ஒன்றியம் – (Union of Regions) என்ற மகுடத்திட்டம் -ஜனாதிபதி சந்திரிகா அரசும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து தயாரித்த திட்டம்.

6. ஜனாதிபதி ராஜபக்‌ஷவினால் நியமிக்ககப்பட்ட நிபுணர் குழுவின் அரசியல் திட்டம் மற்றும் சர்வகட்சிப் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டம் 13ஆவது அரசியல் திருத்தம் 1987 இல் உருவான இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டது.இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் தீர்வாகமாட்டாது என்ற எமது நிலைப்பாட்டை தற்போதய இந்திய அரசிடமும் தெரிவித்துவிட்டோம். இந்திய அரசுகள் கூட 13ஆவது திருத்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி “அதற்கும் அப்பால் சென்று அர்த்தமுள்ள வகையில் அரசியல் தீர்வைக் காண வேண்டும்” என்று இலங்கை அரசிடம் தெரிவித்தால் 13ஆவது திருத்தம் மேற்குறித்த பின்னணிகளிலிருந்து அரசியல் தீர்வாக இருக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஒற்றையாட்சியில் தீர்வு சாத்தியமில்லை இருந்தாலும் இலங்கை இந்திய ஒப்பந்தப்படிதானே வடக்கு கிழக்கு மாநிலங்கள் இணைப்பு மற்றும் ஒரே அரசியல் அலகு சட்ட ஒழுங்கு மற்றும் காணி அதிகாரம், நிதி அதிகாரங்கள் உள்ளன. உள்ள பிரச்சினை என்னவென்றால்

1. இலங்கையிலுள்ள வலுவான ஒற்றையாட்சித் திட்டத்தினால் தெளிவான திட்ட வட்டமான ஆட்சி அதிகாரப்பகிர்வு சாத்தியமற்றது. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரம் பகிரப்படும் நோக்கில் 1987 ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்டதாகும். 13 “பிளஸ்” என்று பேசுபவர்கள் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட விடயங்களில் கமநலச்சேவைகள், போக்குவரத்து முதலான அதிகாரங்களைப் பறித்தெடுத்து விட்டது; “திவுநெகும” சட்டத்தை நிறைவேற்றி நிதி அதிகாரங்களையும் எடுத்து விட்டனர் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.

2. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை (Executive Presidency) இருக்கும் பொழுதும் 18ஆவது திருத்தச் சட்டம் சுதந்திரமற்ற பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆணைக்குழு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழு இருக்கும் நிலைமையிலும் ஆட்சிப் பகிர்வு சாத்தியமற்றதாகின்றது. உதாரணமாக மாகாணங்களுக்குரிய மிகக் குறைந்தளவிலான நிதி கையாள்கை அதிகாரங்களைக் கூட மத்திக்கும், பொருளாதார அமைச்சருக்கும் திருப்பி எடுத்து மத்திய மயப்படுத்தும் “திவிநெகும” பிரேரணைக்கெதிரான எமது வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கும், அந்தத் தீர்ப்பை வழங்கிய பிரதம நீதியரசர் சிராணி பண்டார நாயக்காவுக்கும் எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு செயல்பட்டமையையும் எடுத்துக்கொள்ள முடியும். அடுத்தது, அளவுக்கதிகமாகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட பேரினவாத இராணுவ ஆதிக்கமும், நில அக்கிரமிப்பு மற்றும் தமிழ், முஸ்லீம் மக்களின் இனக் குடிப்பரம்பலைச் சீர்குலைத்து மாற்றியமைத்து தேசிய இனமொன்றுக்குரித்ததான சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தையும் மக்களுக்குரிய மனித உரிமை, மனிதாபிமான உருத்துக்கள் மற்றும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை இல்லாதொழிப்பதுமான ஒரு இனத்துக்கான மொழி, மத, பண்பாடுகளை அழித்து இறுதியில் இன அடையாளங்களை அழித்துவிடும் பௌத்த ஆதிக்கத்தின் இன்றைய பௌத்த குருமாரின், பொது பலசேன இராவணசேன, தேசிய சுதந்திர முன்னனி முதலான சக்திகளின் பேரினவாத நிகழ்ச்சித் திட்டத்தையே நடைமுறைப்படுத்திவரும் ராஜபக்ச அரசு ஒன்றுபட்டிருந்த வடக்கு கிழக்கு மாநிலத்தைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, இராணுவ மயமாக்கி,சிங்கள மயமாக்கி, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகளையே அனுமதித்து நடைமுறைப்படுத்திவருகிறது.

வடக்குக்கிழக்கு இணைந்த மாநிலத்தில் நாமே ஆட்சி செய்திருக்கமுடியும். தற்போதும் ஒட்டுமொத்தமாக 41 உறுப்பினர் பெரும்பான்மை பெற்று இருக்கிறார்கள். இதனை பிரதமர் நரேந்திரமோடியிடம் தெரிவித்தோம். இதன்மூலம் வடக்குக்கிழக்கு இணைக்கப்படவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தியிருக்கிறோம். அடுத்து 13ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்ற எண்ணமும் அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வுகாண வேண்டுமென்ற திடமான ஒருமைப்பட்ட நிலைப்பாடும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசமும், இலங்கையில் மாறி மாறி வந்த ஜனாதிபதிகளும் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு என்பதை திட்டவட்டமாhகக் கூறிவிடலாம்.

போர்க்குற்றமும் சர்வதேச விசாரணையும் இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நாம் கொண்டிருந்த அணுகல் முறை மற்றும் அடிப்படைக்கொள்கை, கோட்பாடுகளை கைவிடாது சமர்ப்பித்த அரசியல் திட்டங்கள், அடிப்படைகளை மாறிமாறி வந்த அரசுகள் ஏற்றுப் பேச்சு நடத்த ஆயத்தமில்லை, இன்றுவரையுள்ள ஜனாதிபதியோ, அரசாங்கமோ இனப்பிரச்சினைத் தீர்வொன்றை முன்வைக்கத் திடசங்கற்ப்பமோ, எண்ணமோ கொண்டிருக்கவில்லை என்பது மிகத் தெளிவானதாகும்.

இந்த அரசில், ஜனாதிபதியிடம் நம்பகத்தன்மையை தமிழ் மக்கள் கொள்ளவும் இல்லை. 2011 ஐப்பசி 24ந் திகதி அமெரிக்க இராஜங்கத்திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தது. சம்பந்தன் தலைமையில் நாம் சென்றிருந்தோம். 2009ல் முடிவுக்கு வந்த போரின் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள், மனிதாபிமான உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் எமது கருத்துக்கள் கேட்கப்பட்டன.

திரு. சம்பந்தன் பதில்களின் நம்பகத்தன்மையின் பேரில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் 2012ல் மார்ச் மாதத்தில் போர்க்குற்ற விசாரணைப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதை உலகமே அறியும். ஒரு அரசியல் கட்சிக்கு மனித உரிமைப் பேரவையில் உத்தியோகபூர்வமாக அங்கம்வகிக்கும் உரித்தில்லை என்பதையும் யாவரும் அறிவர். அரசுகளின் பிரதிநிதிகளும் தன்னார்வ மற்றும் மனித உரிமை அமைப்புக்களும் தான் பங்குபெறமுடியும் என்பதை அறியாதார் உள்ளனர். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் உறுப்புரிமை கொண்ட நாடுகளின் தலைநகரங்களில்தான் தீர்மானம் மேற்கொள்ளப்படுகின்றன.

நாம் அந்த நாடுகளின் தலைமைகளுடன் முடிந்தளவு பேச்சில் ஈடுபட்டிருக்கிறோம். வெளியிலும் முக்கிய நாடுகளின் ஆலோசனை மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் அனுசரனையுடன் நாம் இராஜதந்திர நடவடிக்கைகளில் அந்தந்த நாடுகளின் நம்பகத்தன்மையை பெற்றளவில் வேலை செய்திருக்கிறோம். அமெரிக்க,பிரித்தானிய முதலான வல்லாண்மை நாடுகளின் முன்னெடுப்புக்களால் இராஜதந்திர நடவடிக்கைகளால் குறிப்பாக மனித உரிமைப் பேரவையின் தலைவி நவநீதம்பிள்ளை அவர்களின் உயர்ந்த முயற்சிகளால் தற்போதுள்ள போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.

இலங்கை வந்திருந்த மனித உரிமை பேரவை தலைவியுடன் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தமையை சுட்டிக்காட்டவேண்டும். போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அந்தப் பிரேரணை நாம் எதிர்பார்த்த அளவு நிறைவைத் தராது விட்டாலும் அதையாவது நிறைவேற்ற முடிந்தமை பெரும் இராஜதந்திரச் சவால்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் நிறைந்த நாடுகளினால் தான் நிறைவேறியது. இதனைக் கூட முறியடித்துவிட சிலர்; அரசு தரப்பு மட்டுமல்ல தமிழர் தரப்பிலும் எடுத்த முயற்சிகளை எல்லோரும் அறிவார்கள். இந்தப் பிரேரணைகள் ஜ.நா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமைப் பேரவைத் தலைவரின் அறிக்கைகளின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டன என்பதை அறியவேண்டும்.

இந்தவிடயத்தில் கணிசமான புலம்பெயர்ந்த அமைப்புக்களின் முயற்சிகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. அதே நேரத்தில் தவறான முயற்சிகளைக் கண்டிக்காமலும் விட முடியாது. ஐ.நா மனித உரிமை பேரவையில் சென்ற முறை நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான பிரேரணை பேரவையில் முன் வைக்கப்பட்ட தருணத்தில் தென்னாபிரிக்கா, ஜப்பான், இந்தியா நடுநிலை வகித்தன. தங்களைத் தற்காத்துக்கொண்டது மட்டுமல்ல நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அரசையும் த.தே.கூட்டமைப்பையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி இனப்பிரச்சினை முதலானவற்றிற்கு தீர்வை ஏற்படுத்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே நடுவு நிலைமை வகித்தததாகக் கூறின.

இதன் பொருட்டு தென்னாபிரிக்கா, தனது சிறப்புத்தூதுவராகச் செயற்பட ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் செல்வாக்கு மிகுந்தவரான அந்நாட்டின் துணை ஜனாதிபதி சிறில் ரம்போசாவை நியமித்திருக்கிறோம் என்று கூட அறிவித்தது. இதன் தொடர்பில் அரசுப் பிரதிநிதிகளையும் த.தே.கூட்டமைப்பையும் தென்னாபிரிக்காவுக்கு வேறு வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துப் பேசியது. அவர் சென்ற “யூன்” மாதத்தில் இலங்கைக்கு வந்து பேச்சுக்களில் ஈடுபட்டார். த.தே.கூட்டமைப்பு முன் வைத்த வாதங்களை பெருமளவில் ஏற்றுக்கொண்டார் என்றே நம்புகின்றோம். ஆனால் தென்னாபிரிக்க ஜனாதிபதியைத் தங்களுக்கு உதவுமாறு அழைத்த இலங்கை ஜனாதிபதி, அழைத்த வேகத்திலிருந்து அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

நாம் ராம் போஷாவுடன் பேசாதுவிட்டால் நாம் அவர்களின் அனுசரனையை வென்றெடுத்திருக்க முடியாது.அரசின் ஏமாற்றுத்தனத்தை அவர்களும் அறிய வைப்பதில் நாம் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். 60 ஆண்டுகளின் தொடர்ச்சியாக போர் முடிந்த பின் வரைக்கும் ஜ.நா மனித உரிமைப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணை வரைக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கொண்டிருந்த நடவடிக்கைகளையும் இராஜதந்திர செயற்பாடுகளையும் பொதுத் தேர்தல் உள்@ராட்சி மன்றங்களின் மாகாணசபைத் தேர்தல்களில் வடக்குக்கிழக்கு மாநிலத்தின்; தமிழ் மக்கள் தொடச்சியாக மிக திடசங்கற்பத்துடன் பெரும்பான்மையான வாக்குகளினால் எம்மை ஆதரித்து இராஜபக்ச அரசுக்கும் உலகுக்கும் வெளிப்படுத்தியிருந்தமையைச் சுட்டிக்காட்டுகிறேன். அதற்காக எமது தமிழ் மக்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சர்வதேச சந்தர்ப்பங்களைப் பற்றி நிற்போம் சர்வதேச சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தாது விட்டால் இலங்கை அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வென்றெடுத்துவிடும். சர்வதேச சந்தர்ப்பம் எப்பபொழுதும் ஒரே மாதிரி இருக்குமென்பது இல்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய கிழக்கிலும் முக்கியமாக இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை காஸா பள்ளத்தாக்கில் நடைபெறும்; போர் உலகை ஆக்கிரமித்திருக்கிறது. அதே போல ரூசிய – உக்ரைன் போராட்டங்களைக் குறிப்பிடலாம். 2014 ஆரம்பத்தில் இலங்கை வந்த ரஷ்ய இராஐதந்திரி என்னிடம் வெளியார் தலையீட்டை தாம் விரும்பவில்லை என்று எடுத்துரைத்தார். இப்பொழுது ரஷ்யா தன் இன ரஷ்யர்களுக்காக உக்ரைன் மீது படையெடுத்து ரூசிய மக்கள் பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டமையையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அமெரிக்கா, ஜரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளும், நேட்டோவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளமையையும், உக்ரைனை ஆதரித்து நிற்பதையும் குறிப்பிடலாம். இதுபோலவே சிரியாப் பிரச்சினையும், ஈராக் பிரச்சினையும் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றில் வல்லாண்மை நாடுகளினதும் பிராந்திய நலன்கள் மற்றும் பொருளாதார நலன்கள் அந்தந்த நாட்டு நடவடிக்கைகளின்; பின்னனியிலிருக்கும். அண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் விமானப் போர்ப்படைக் கல்லூரியின் சர்வதேச பாதுகாப்புக்கான கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியர் அமித் குப்தா இலங்கையின் மாநாடொன்றில் பேசும் பொழுது “இலங்கையானது அமெரிக்கா, சீனா, மற்றும் இந்தியா ஆகிய புதிய கூட்டணியுடன் சமச்சீரான உறவுகளைப் பேணவேண்டும்.

அதுவே வளர்ச்சிப்பாதைக்கு நல்லது என்றும் “ இலங்கை ஆசியாவில் ஒரு கேந்திரஸ்தானத்தில் இருப்பதை மறந்துவிடக்கூடாது” என்றும் கூறியிருக்கிறார் என்பதை ஆராய வேண்டும். இலங்கை அரசுகளானது குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆட்சிகள் 1962ல் இந்திய – சீனப் போரின் போதும், சீனாவையும 1971ல் இந்திய பாகிஸ்தான் போரின் போதும்; பாகிஸ்தானையும் ஆதரித்து நின்றன. தற்போதைய அரசும் இலங்கையில் சீனா காலூன்றும் நடவடிக்கைகளையே திட்டமிட்டுத் தீவிரப்படுத்தி வருகிறது.

இச் செயலானது இந்திய நாட்டுக்குப் பெரும் சவாலாகவே இருக்கும். வல்லாண்மை நாடுகளின் சந்தர்ப்பங்களும் தந்திரோபாயங்களும் 1971ல் பங்களதேசம்; உருவாக்கப்பட்டபோது இந்திராகாந்தியின் தூரநோக்கில் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஸ் உருவாக்கவேண்டும் என்பதுதான் ருசியாவுடன் இருபதாண்டு நட்புறவு உடன்படிக்கையிருந்தது. சீனா பங்காளதேஸ் விடயத்தில் பாகிஸ்தானுடன் நட்புறவைப் பேணியது. சீனாவின் இந்த நிலைப்பாடு ஆச்சரியமானதே.அரசியலிலும், பொருளாதாரத்திலும் அடக்கி ஒடுக்கப்பட்ட பங்காளதேஸ் மக்கள் பாட்டாளிகளின் விடுதலைக்கு எதிராக இருந்தது.

சீனாவும் அமெரிக்காவும் பங்களாதேஸ் மக்களின் பொதுத் தேர்தல் தீர்ப்பையும் மதிக்கவில்லை.அமெரிக்கா சீனா, பூட்டோவின் பாகிஸ்தான் ஒரு பக்கமும், இந்தியா,ரூசியா, பங்காளதேஸ், ஈரான் ஒருபக்கமாகவும் பிரிந்து நின்றன. அவ்வாறே ஜ.நா.பாதுகாப்புச் சபையிலும் ரத்து அதிகாரத்தைப் பாவித்தனர்.பங்களாதேஸ் விடுதலையை முதலில் அங்கீகரித்தது ரஷ்யாதான் சீனாவும்,அமெரிக்காவும் எதிர்த்து நின்றன. இங்கு சித்தாந்தம் பொதுவுடமை எல்லாம் பொருத்தமாக இருக்கவில்லை. இப்பொழுது பொருளாதார நலன்களில் 2014ல் ஒரு புதிய கூட்டு உருவாகியிருக்கிறது.“BRICS” ஐந்து நாடுகள், IMF, World Bank க்கு ஈடான கோட்பாட்டில் உருவாகியிருக்கன்றன. .பிரேசில், ரஷ்யா, இந்தியா சீனா,தென்ஆபிரிக்கா ஒரு நிதிக் கட்டமைப்பில் வேலை செய்ய உடன்படிக்கை செய்துள்ளன. இவற்றைப் பார்க்கின்ற போது பொருளாதார நலன்களின் அடிப்படையில் இக்கூட்டுக்கள் உருவாகின்றன என்பது தெரியும்.

இதுபோலவே புதிய இராணுவக் கூட்டுக்களும் “நேட்டோ” போன்று உருவாக்கப்படுகின்றன. புதிய பொருளாதாரக் கோட்பாடான உலக மயமாக்கல், (Globalisation) சந்தை வர்த்தகப் பொருளாதாரம் (Market Economy) உலகில் செல்வாக்கு செலுத்துகின்றது.

உலகில் மூன்றாவது உலகப்போர் வருமாயின் பொருளாதார வளங்களை மையமாகக் கொண்டே தொடங்கப்படலாம். அடுத்து சீனாவின் பொருளாதார, இராணுவ தந்திரோபாயங்களில் உலகின் பரவலான புதிய வகிபாகத்தையும் புதிய மூலோபய சுற்றி வளைப்புக்களையும் உருவாக்கி வருகின்றது. கடன் கொடுப்பது முதல் முதலீடு செய்வதிலும் அந்தந்த நாடுகளில் உற்பத்தி பொருள்கள் கொள்வதிலும் செல்வாக்கைச் செலுத்தவதில் ஆழமாகவும்,அகலமாகவும் கால் பதித்து வருவதையும் மறுபக்கம் போட்டியாக அமைந்துள்ள சூழல்கள்களையும் பாசீலிக்க வேண்டியுள்ளோம்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் செயலர்களையும் ஆகஸ்ட்22,23ல் சந்தித்துப் பேசுவதற்கு முன்னர் அரசின் கையாளாக நின்று வரும் சுப்பிரமணிய சுவாமியின் சலசலப்புகளுக்கு மத்தியில், பாரதப் பிரதமருடன் பேச்சு நடாத்திய பொழுதும், பின்னரும் பிரதமரின் அணுகுமுறை, “பாதிப்புற்ற மக்களிடம்; அனுதாபம், அனுசரனை வெளிப்பட்டமை” எமக்கு ஒரு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்திருந்தது. “இராஜதந்திர ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கிறது” என்று இராஜ தந்திரியான டயான் ஜயத்திலக போன்றோர் குறிப்பிடுமளவுக்கு இராஜதந்திரம் இரு தரப்பிலும் கையாளப்பட்டிருக்கிறது. இது ராஜபக்‌ஷ அரசுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியாகும்.

அவுஸ்ரேலியாயாப்பயணமும் கொழும்புத் திட்டமும் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவாக அவுஸத்ரேலியா சென்றிருந்தோம். அவுஸ்ரேலியாவில் மேற்கு அவுஸ்ரேலியப் பல்கலைக்கழகத்தில் (Western Australian University) யில் ஒரு கலந்துரையாடலில் பல்கலைக்கழக ஆய்வில் சீனாவின் முக்கியத்துவம் பற்றி குறிப்புக்கள் இருந்தபொழுதிலும் “எதிர்காலத்தில் இந்தியாதான் வளரும் வல்லான்மை நாடாகும் “Growing Economic Power” என்று குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்ததாக அவுஸ்திரேலியாவின் முக்கிய பல நாடுகளில் முதலீடுகளும், வர்த்தக முன்னேற்றங்களும் பங்களிப்புக்களும் ஆஸ்திரேலியாவை மையப்படுத்தி பொருளாதாரக் கூட்டமைப்புகளும் ஏற்படலாம். இலங்கையைப் பொறுத்தவரையிலும் ஆஸ்திரேலியா முதலீடுகளை பெருக்கும் திட்டத்திடலுள்ளது. இன்னும் “கொழும்புத் திட்டத்தை’ (Colombo Plan) ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில் வடக்கு கிழக்கு மலையகப் பிரதேசங்கள் போரின் பாதிப்புக்;குள்ளான பிரதேசங்களின் திட்டங்கள் உள்ளீர்க்கப்படவேண்டும். இவையெல்லாம் எமக்குள்ள இராஜதந்திர உபாயங்களினால் ஊக்குவிக்கின்றன. அதற்கான பங்களிப்பை ஆய்வுகளையும், திட்டங்களையும் உருவாக்க நிபுணத்துவத்தைப் பெறவேண்டியுள்ளோம்.

தமிழரசுக்கட்சியின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையும் பொறுப்பும். உடனடிப்பிரச்சினைகள்.

1.ஜ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரனையை உருவாக்குவதில் எமக்கிருந்த பங்கானது கணிசமானது. அந்த விசாரணைகளினால் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்பதுடன் அதனடிப்படையில் தமிழ் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படவேண்டும் என்பதுதான். இத்தகைய காலச்சம்பவங்கள் இடம் பெறாமல் தடுப்பதும், அதற்கான நிவாரணங்களைப் பெறுதலும் முக்கியமாகும். அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உண்மைகளைக் கண்டறிவதில் கையாளவேண்டிய பொறுப்புக்கள், மற்றும் சர்வதேச இராஜதந்திர உபாயங்களில் வேலை செய்வதற்கான நிபுணத்துவ கட்டமைப்பையும் உள்வாங்குதலும்; அவசியமானதாகும். அதேவேளை இலங்கையில் எமக்குரிய கடப்பாடுகளையும் பொறுப்புக்களையும் கண்டறிந்து, அடையாளப்படுத்தி அவற்றை முன்னெடுப்பதற்கான பொறிமுறைகளையும் வேலைத்திட்டத்தையும் உருவாக்கவேண்டும்.

1. வேலைத்திட்டத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் நிலஅபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதும்

2. அந்நிலங்களை திரும்பக்கையளிக்கச் செய்தலும் மக்களின் மீள்குடியேற்றத்தின் பொருட்டு மக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றி செல்லவைத்தலும் மிக அவசியமானதாகும். இராணுவ ஆதிக்கம் தமிழ்ப்பிரதேசங்களில் நீக்கப்படவேண்டும் என்பது மிக அவசியமாகும்

3. தமிழ்நிலம், மொழி பண்பாடு மதவழிபாட்டுத்தலங்கள் அதன் சின்னங்கள் பாதுகாக்கப்படுதல் வேண்டும்

4. மக்களின் உளஉடல் ரீதியானதும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்

5. இன அழிப்பை ஆவணப்படுத்துதலும் தத்துவார்த்த ரீதியில் நிரூபித்தலுக்குமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் வேண்டும்

இதன் அடிப்படையில் எம்முன்னுள்ள உடனடிப்பணிகள்:- 1 இனவழிப்பு தொடர்பானவை
2. நில மீட்புத் தொடர்பானவை

3. பெண்களின் பாதுகாப்புத் தொடர்பானவை

4. காணாமல் போனவர்கள் தொடர்பானவையும் அவர்கள் வாழ்வாதாரம் தொடர்பானவையும்; இந்த அடிப்படையில் பிரேரணைகளை உருவாக்குவதிலும் சர்வதேச மற்றும் ஜ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையிடுதலும் முக்கியமானதாகும்.இதற்கு பொருத்தமான நாடுகளை வென்றெடுக்கவேண்டும்.

இதன் பொருட்டு நிபுணத்துவம் மிக்கவர்களையும் சர்வதேச சட்டங்களினால் அனுபவங் கொண்டோரையும் சான்றோர்களையும் உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றைப் பிரேரிக்கின்றேன். காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையமும். அம்பாந்தோட்டையில் வீரக்கொட்டியாவில் தான் விமான நிலையம் அரசினால் கட்டுவதற்கு முதலில் ஏற்பாடிருந்தது. அங்குள்ள சிங்கள மக்களும், விவசாயிகளும் தங்கள் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடனேயே புதுமாத்தளனுக்கு விமான நிலையத்தை மாற்றிவிட்ட ராஜபக்‌ஷ அரசு, வலிவடக்கில் காங்கேசன்துறைமுகம், பலாலி விமானநிலைய அபிவிருத்தி என்று இலட்சக்கணக்கான விவசாய குடியிருப்பு நிலங்களையும், மீன்பிடி வளமுள்ள கடற்பிரதேசங்களையும் அபகரித்து இராணுவத் தேவைகளுக்கும், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் அந்நிலங்களை பயன்படுத்துகிறது. அம்மக்களை அகதிகளாக்கி அநாதரவாக்கி தெருவில் விட்டுவிட்டு 25ஆண்டுகளுக்கு மேலாக உல்லாச புரியில் ஆளுங்கட்சியினரும், இராணுவத்தினரும் பகற்கொள்ளைபோல் மேலும் மேலும் தமிழ் மக்களின் நிலங்களை கொள்ளையடிக்கிறார்கள். காங்.துறைமுகம், பலாலி விமானநிலையம் எம் மாநிலத்திற்கு வேண்டும்.அதற்கான அபிவிருத்தி விஸ்தரிப்புக்கு ஆழமற்ற கடற்பரப்பைச் சிங்கப்பூர் போல பாவிக்கலாம் என்ற எமது ஆலோசனை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இப்பொழுதும் அதைச் செய்யலாம். அதனை வற்புறுத்துகிறோம். அபகரிக்கப்பட்ட வலி. வடக்கில் மட்டும் 6000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் மீளக் கையளிக்க வேண்டுமென்பதை வற்புறத்துகிறோம். கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தை அண்டிய பிரதேசங்களில் 1700 ஏக்கர் மக்களின் நிலங்களை அபகரித்து அரசு 10,000 இராணுவக்குடியிருப்புக்களைக் கட்டத்திட்டமிட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இராணுவக்குடும்பத்திற்கு 5பேர் என்று பார்த்தால் 50000 சிங்கள பௌத்தர் குடியேற்றப்படுவார்கள். மொத்தமாக தமிழர் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்ட சம்பூர் உட்பட மக்களின் நிலங்கள் திரும்பக் கையளிக்கவேண்டுமென்பதை வற்புறுத்திகிறோம்.

மீனவர் பிரச்சினை மற்றும் வாழ்விழந்த பெண்கள்: மன்மோகன் பிரதமராக இருந்தபொழுதும் மீனவர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று நாம் கேட்டிருந்தோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு புறம் எங்கள் மீனவர்கள் ஆழ்கடல் சென்று சொந்தப் பிரதேசங்களில் குடியிருப்புக்களிலிருந்து மீன்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வாடியமைத்து மீன்பிடிக்கச் சிங்கள மீனவர் அனுமதிக்கப்படுகின்றனர். எங்கள் மீனவர்களிடம் Trollers, multiday Boats பொருத்தமான வலை உபகரணங்கள் ஒருபொழுதும் இருக்கவில்லை. தென்னிலங்கைச் சிங்கள மீனவர்கள் தடைவிதிக்கப்பட்ட உபகரணங்களைப் பாவித்தே மீன்பிடிக்க இராணுவம் பாதுகாப்பளிக்கின்றது. இதனிடையே சீன கப்பல்களும் மீன்பிடிப்பதாக தகவல் வருகின்றன. மறுபுறத்தில் இந்த ஐந்து ஆண்டுகளில் தான் மிக அதிகமாக இந்திய மீனவர்கள் இலங்கை கரையோரங்களிலும் ஆழ்கடலிலும் மீன் வளங்களை வாரிக்கொண்டு செல்வதால் கரையோரக் கடலில் கூட கிடைக்கும் சந்தர்ப்பத்திலும் எம்மீனவர்கள் மீன்பிடித்துத் தம்வாழ்க்கையை நடத்தமுடியாமல் இருக்கின்றனர். இதுபற்றியும் மீனவர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் வெளியுறவுச் செயலாளருடனும் பேசியிருக்கின்றோம்.

வாழ்விழந்த 80,000 பெண்கள் பற்றி, பெண் வெளிநாட்டமைச்சரிடம் பேசினோம். நிலத்தடி நீரும் இரணைமடு நீரணை மற்றும் ஆறுமுகம் திட்டமும் நீண்ட பல ஆண்டுகளாக யாழ்ப்பாணம் வரண்டு விடப்போகிறது என்றும் நிலத்தடிநீர் நீரூற்றுக்கள் கொடிய நோய்கள் வரக்கூடியளவுக்கு மாசடைந்து வருகின்றன.என்ற ஆய்வுகள் அதிர்ச்சியானவை மட்டுமல்ல மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதுமாகும். உலக முழுவதும்(Global warming) வெப்பம் அதிகரிப்பதுவும் பனிமலைகள் உருகி வருவதும் மழை சீரற்றுப் பொழிவதும் காலநிலையில் மாற்றங்களையும் உருவாக்கிவருகின்றது. மழைநீர் கூட இராசாயன கலவையுடனே தான் பெய்கிறது. நிலத்திலும் நீரிலும் சுண்ணாம்புக் கற்பிரதேசங்களை குறிப்பாக இலங்கை வட பகுதி யாழ்ப்பாணப்பிரதேசத்தில் இரசாயனக் கலவைகள் ஊடறுத்து நிலத்தடி நீர்த்தடகங்கள் வரையும் சென்றுவிடுகின்றன. அந்த நீரை வேளாண்மைக்கோ, குடிநீராகவோ குடிப்போமானால் நைற்றேயன் மற்றும் குளோறைட் கலந்து இருக்கின்ற போது நோய்கள் உண்டாகின்றன. அதற்கும் மேலாக மலசலகூடங்கள் கட்டற்று பாதுகாப்பற்று கசிந்து பரவ உடல்நலப்பாதிப்பை ஏற்படுத்திவிடப்போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டுதான் இரணைமடு நீர்ப்பாசண மற்றும் குடிநீர்த்திட்டம் ஆசிய அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து வகுக்கப்பட்டது. இதற்காக பல ஆய்வுகள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அத்திட்டம் வரவேற்கக் கூடிய ஒன்று தான். ஆனால் அத்திட்டத்தை கொண்டு செல்வதில் விவசாயிகளை அணுகி நம்பத்தகுந்த வகையில் நிறைவு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறும் வகையில் மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபொழுது வடிவமைக்கப்பட்ட அத்திட்டத்தில் சிறியளவு திருத்தங்களைச் செய்து மறுபக்கத்தில் ஆறுமுகம் திட்டத்தையும் பரிசீலித்து மேம்படுத்தினால் குடிநீர்த்தேவையையும் நிறைவேற்றலாம் என்ற முறையில் நாம் அத்திட்டத்தை ஒப்புக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மழை இல்லை. இரணைமடு வற்றி வரண்டு கிடக்கிறது. பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது. அதை விட முக்கியம் நூறு ஆண்டுகளாக நாம் விட்ட தவறு மழைநீரைத் தேக்காமல் விட்டதுதான். இதுமிகப்பெரிய தீங்காகும். இப்பொழுதாவது அரசும் மாகாண சபையும் உள்ளுராட்சி மன்றங்களும் அதிகாரமளிக்கப்பட்டு தேவையான நிதியைத் தேடி மழைநீரை சேமிப்பதுதான் மாற்றுத்திட்டமாக இருக்கவேண்டும். மேலும் நிபுணத்துவ ஆய்வுகளும் திட்டமிடலும், நிதியை பெறவேண்டிய உடன்பாடுகளும் தேவையாகும். இப்பொழுது மழையின்மையால் குறிப்பாக வடபகுதிப் பிரதேசங்கள் வரண்டு கிடக்கின்றது.இதற்கு உடன் போதிய நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும். நில ஆக்கிரமிப்பும் மீள்குடியேற்றமும் உதாரணமாக வடக்குக்கிழக்கு மாநிலத்தில் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான பாரம்பரியமானதும்இ பாரதீனப்பட்டு வருபவையுமான நிலங்களும் சொத்துக்களும் பகற்கொள்ளை போல இராணுவத்தாலும் பௌத்த தீவிர சக்திகளினாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அந்த நிலங்களுக்குச் சொந்தமான குடியிருப்பாளர்கள் 25 ஆண்டுகளாக அகதி முகாம்களில் சொந்த மாநிலத்திலும் குறிப்பாக இந்தியாவிலும் இரண்டு இலட்சம் பேர் வரையில் தஞ்சமடைந்துள்ளனர். இப்பொழுது இந்திய அரசுத் தகவலின்படி கூட 121000 மக்கள் அகதிகளாக உள்ளனர்.அதைவிட நிலமற்றவர்கள் தொழிலற்று வாழ்வாதாரமற்றவர் தொகையும் பெருகிவருகிறது. அகதிமுகாம்களிலும் நண்பர்கள் வீடுகளிலும் ஒரு இலட்சம் பேர் வரையில் உள்நாட்டில் அகதிகளாக உள்ளனர். அந்த நிலங்களில் இராணுவமும் அரசும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர். அதேவேளை இந்நாட்டில் பாதுகாப்பில்லை என்ற மனவேகத்தில் வேறுநாடுகளுக்குத் தப்பி ஓடுகின்றனர். இதனை அரசு சார்பானவர்களே ஊக்கப்படுத்துகின்றனர். அண்மைக்காலங்களில் தென்இலங்கையில் அம்பாந்தோட்டைக் கடலோரங்களிலிருந்து கடத்தல்காரர்கள் இம்முயற்ச்சிகளில் ஈடுபட்டமை வெளிப்பட்டிருக்கிறது.கிழக்கில் திருகோணமலையில் சம்பூர் பிரதேச மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மீளக்குடியேற மறுக்கப்பட்டுள்ளனர். இந்திய நாடு சம்பூரில் மின் நிலையம் நிறுவ 500 ஏக்கர் நிலம் எடுத்துகொண்டது. சம்பூர் மக்கள் ஏனைய பிரதேசத்தில் மீளக்குடியேற்றப்படுவர் என புரிந்துணர்வுடன் இருந்த பொழுதிலும் இந்திய அரசும் அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்த நிலைதான் வன்னியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஏற்பட்டுவருகிறது. அண்மையில் பாரதப்பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சரிடமும் இவ்வகதிகள் பற்றிப் பேசியிருக்கிறோம்.

இந்தியாவில் தமிழ் மாநாட்டில் அகதிகளாக 115 முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் உள்ள இலங்கைத் தமிழ் மக்கள் மீண்டும் அவர்கள் விருப்பத்தினை அறிந்து அவரவர் சொந்த நிலத்தில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். அவர்கள் தங்கள் சொந்த நிலங்களிலேயே மீளக்குடியேற்றப்படுவதையும் அவர்களின் பாதுகாப்பையும்இ வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறோம். ராஜபக்~ அரசுக்கு இதுவும் ஒரு பொறுப்பையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதுமாகும். இதுவரையில் 2003ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்திலே என்னுடைய பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குழாத்தினர் எனது வழக்கில் எமக்கு இடைக்காலத் தீர்ப்பொன்றை வெளியிட்டனர். அத்தீர்ப்பு முழுமையாக மதிக்கப்படவில்லை. இப்பொழுது நில உரிமையாளர்களால் யாழ் ஆயர் உட்பட 2176 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதி இன்னும் கிடைக்கவில்லை. 2176 அகதி மக்களின் அடிப்படை உரிமைக்காக நில ஆக்கிரமிப்புக்கெதிராக ஜனநாயக அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக உயர்நீதிமன்றத்திலே நடைபெறும் வழக்குகள் திரு. கனகஈஸ்வரன், சுமந்திரன் முதலான வழக்கறிஞர் குழாம்கள் ஊதியமின்றி பல ஆண்டுகளாக வாதாடி வருகின்றனர். அவர்களுக்கும் மனித உரிமைகளுக்காக வாதாடும் ஏனைய வழக்கறிஞர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

இத்தகைய நிலைமைகளில் சைப்பிரஸ் – துருக்கி தொடர்பில் லிஸிடோவின் சர்வதேச வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அவை உதவியாக இருக்கும். சந்தைப் பொருளாதாரமும் ஆக்கிரமிப்பும் போர் முடிந்ததிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திலும் அபிவிருத்தி என்ற போர்வையில் பெருமுதலாளித்துவத்தின் இறக்குமதிஇ தென்னிலங்கை உற்பத்திப் பொருட்களின் இறக்குமதிச் சந்தைகள் திறக்கப்படுகின்றன. இதனால் வடபகுதி யாழ்ப்பாண வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். சந்தைகளில் சொந்த உற்பத்திகளை விளைச்சல் உற்பத்தி செலவைக் கூட ஈட்டமுடியாதளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. வங்கிகள் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. பெற்ற கடனை ஈட்ட முடியாத நிலையும் புதிய கடன்களை விவசாயிகள், தொழில்துறையினர் பெறமுடியாத நிலையும் பெரும்பாலான வங்கிகள் கூட நட்டத்திலிருப்பதையும் வேலைவாய்ப்பும் அற்ற ஒரு நிலைதான் அபிவிருத்தியின் பெயரால் இடம்பெற்றுள்ளது. ஒரு காலத்தில் வேளாண் விளைச்சல் மற்றும் மீன் முதலியன 300க்குக் குறையாத லொறிகள் கொழும்புக்கு தென்பகுதிக்கு தினமும் கொண்டு சென்றன. இவ் விடயத்திலும் மாற்று நடவடிக்கைகள் தேவை. ஐ.நா யுனிசெவ்ப் (unicef) நிறுவன அறிக்கைகளின் படி 70 – 80மூ குழந்தைகளும் கர்ப்பிணித் தாய்மார்களும் ஊட்டச்சத்தற்றவர்களாக கடந்த 20 ஆண்டுகளாகவே வடக்குக்கிழக்கு மாநிலங்களில் உள்ளனர் என்று கூறுகின்றது. அதற்கும் மேலாக போரின் காரணமாக 80ஆயிரம் வாழ்விழந்த இளம்பெண்கள் வாழ்வாதார மற்றும் வாழ்க்கைத்துணையற்றும் எதிர்காலமற்றவர்களாய் ஏங்கியிருக்கிறார்கள்.

இந்த வாழ்வற்ற முழு மனித குல வளர்ச்சியற்ற விடயங்களில் மனிதாபிமான அடிப்படையிலான திட்டமிடல் அவசியமாகும். வாழ்விழந்தவர்களுக்கு மறுவாழ்வு ஊக்குவிக்கப்பட்டு உதவிகள் வழங்க வேண்டும். மூலவளங்கள் சுரண்டப்படுதல் வடக்குக்கிழக்குக் பகுதிகளின் மூலப்பொருட்கள் இல்மனைட் முதல் சுண்ணாம்புக்கல் மணல் முதலானவைகள் அரசும் அடியாட்களினாலும் கொள்ளையிடப்பட்டும் பெரும் இலாபங்களை சுரண்டுவதாகவுமே பெரும் வர்த்தகம் நடைபெறுகிறது. இதன் இலாபங்களில் அவ்வப் பிரதேசங்களும் அவ்வப்பகுதி மக்கள் உழைப்பாளிகளுக்கும் கிடைக்கவேண்டும். குறிப்பாக வடபகுதியில் மீன்வளம் பொருளாதார ரீதியில் பெரும் வருமானத்தை ஈட்டக்கூடியதொன்றாகும். அதன் உற்பத்திகள் திட்டமிடப்படாமல் சந்தைப்படுத்தாமல் அரசும் அரசின் அடியாட்களும் இயக்கங்களும் கொள்ளையடித்து வருகின்றன. முறையாக அத் தொழில் உற்பத்தியும் பயன்படுமானால் அதன் வருமானம் அப்பிரதேசங்களுக்கும் அத்தொழில் ஈடுபடுவோருக்கும் பங்குகள் இலாபங்கள் செல்லமுடியும். பனை வளமும் பயன்பாடும் உயிரை பணயம் வைத்து சீவப்படும் கள்ளு விற்பதற்கு தடை. சீவப்படும் கள் பெருமளவில் நிலத்தில் தினமும் ஊற்றப்படுகிறது. அக்கள்ளிலிருந்து மதுபானம் தயாரிக்க வேண்டுமென்பதில்லை. அவ்வாறு மதுபானம் தயாரித்தாலும் அரிய மருத்துவ பானமாக்கி மக்கள் பாவனைக்கும் ஏற்றுமதிக்கும் உரிமையாக்கப்படமுடியும். அதைக் கையாள்வதற்கு உள்ள கூட்டுறவுத்துறையும் சீர்குலைக்கப்படுகிறது. கள்ளு பதநீராகவும், புளிக்காமல். வெறிஊட்டமற்றதாக மக்கள் மருந்தாக ஒரு ஆரோக்கியமான பானமாக மக்கள் பருகலாம். அதைவிட தெற்கிலிருந்து செயற்கையாகவும் இறக்குமதி செய்து கள்ளு விற்பனை செய்யப்படுகிறது. சாராயம் வைன் போன்ற மதுபானம் விற்பனைக்கு தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. பெரு வருமானம் அரசினாலும் முதலாளிகளினாலும், முகவர்களினாலும் ஈட்டப்படுகிறது. எம்மக்கள் இளம் சமுதாயம் இதனால் சீரழிகிறது. எமது உள்ளூர் உற்பத்திகளும் வருமானமும் சுரண்டப்படுகிறது. கொள்ளையிடப்படுகிறது. இத்துறை வடக்கு மாகாணசபையிடம் கூட்டுறவுத் துறையிடம் கொடுக்கப்படவேண்டும். அந்தச் சமூக மக்கள் நலன்களுக்கு அந்த இலாபம் பங்கிடப்படவேண்டும். உள்ளூர் ஆட்சி சபைகள் எம் ஆளுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் வரவு செலவுத்திட்டத்தை சில சபைகளில் தோற்கடிக்கச் சில உறுப்பினர்கள் அதுவும் மத்திய ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடிக்க எடுத்த முயற்ச்சிகளை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதே நேரத்தில் ஜனநாயக விழுமியங்களை மதியாமலும் ஊழலில் ஈடுபட்டார்கள் என்று சுமத்தப்பட்ட குற்றங்களில் சம்மந்தப்பட்ட சில சபைகளின் தலைவர்களையும் நாம் ஏற்கமுடியாது.

ஊழல் பேர்வழிகளுடன் நாம் எந்த வகையிலும் சமரசஞ் செய்யமுடியாது. தவறிழைத்தவர்கள் பொதுநலன்களுக்கு விரோதமாகச் செயல்படும் உறுப்பினர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்தால் அதற்க்கெதிராக நீதிமன்றங்களை நாடி எம் நடவடிக்கைகளை முடக்கும் கைங்கரியங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நாம் துன்பம் அடைந்திருக்கின்றோம். பல சபைகள் சிறப்புடன் செயல்படுகின்றன. அவ்வேளையில் மக்களின் நம்பிக்கையைப் பெறவேண்டி சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் நீண்ட காலத்தின் பின் 2011 தேர்தல்களின் பின் மிகப்பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வந்தும் பல சபைகள் போதிய வருமானம் இல்லாமலும் அதனால் அபிவிருத்திப்பணிகளை செய்யமுடியாமலும் உள்ளன. இச் சபைகள் வினைத்திறன் மிக்கதாகவும் ஆளுமையுள்ளனவாகவும் செயற்பட வேண்டும். அதற்கு அரசின் சிறப்பான உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். மாகாணசபைகள் முழுமையான பகிரப்பட்ட அதிகாரங்களுடன் உள்ளூராட்சி சபைகளையும் வழிநடத்தக்கூடிய அதிகாரங்களையும் கொண்டிருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அதிகாரங்கள் மேலும் பகிரப்படவேண்டும். அப்பொழுதுதான்; அடிமட்டத்திருந்து ஜனநாயகமும் ஆளுமையும் தலைமைத்துவமும் தழைத்தோங்கமுடியும். பிரிட்டன், கனடா முதலான நாடுகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு “பொலிஸ்” அதிகாரம் மருத்துவமனைகள் பராமரிப்பு உள்ளூர் கல்வி, சுகாதாரத்துறைகளில் அதிகாரங்கள் பல தசாப்தங்களாகவே வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும். இதற்கென ஒரு தரம் மிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டு இச் சபைகளின் நிலவரங்கள் திரட்டப்படுதல் வேண்டும். வடக்கு மாகாணசபை வடக்கு மாகாணசபைக்கு அப்பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்கு என 5813 மில்லியன் அரசு ஒதுக்கிவிட்டதாக அரசு அறிவித்தது. ஆனால் நாமறிந்த வகையில் 1876 மில்லியன்கள் மட்டுமே தான் மாகாணசபைக்குச் சேர்கிறது. ஆனால் 3955 மில்லியன்கள் வரையில் மத்திய பொருளாதார அமைச்சு, பசில் ராஜபக்சவே கையாள்கிறார் என்று தகவல் இருக்கிறது. தமிழ் மக்களின் கொள்கை மற்றும் தம்மைத்தாமே ஆளும் தன்னாட்சி உரிமை மீது மத்திய அமைச்சு பேரம் பேசுகிறது. வடக்கு மாகாணசபையை தெரிவு செய்த மக்களின் தீர்ப்பை தென்னிலங்கை அரசு ஏற்க மறுக்கிறது. அத்தடன் ஆளுநரும், பிரதம செயலாளரும் வட மாகாண சபையின் மறைமுக நிர்வாகமொன்றை நடத்துகின்றனர்.

அரசும் பின்னால் ஆதரவு வழங்குகிறது. மக்களின் நம்பிக்கையைக் குலைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானதும் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்புகளுக்கு எதிரானதுமாகும்.இதனால் மாகாணசபையை முடக்கி மக்களையும் மாகாண நிர்வாகத்தையும் சலிப்படையச் செய்யும் உள்நோக்கத்துடன் தென்னிலங்கை அரசு செயல்படுகிறது என நாம் குற்றஞ்சுமத்துகிறோம். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்காக அபிவிருத்திக்காக உதவுவதற்குப் பல நாடுகள் வெளிநாடுகளிலுள்ள எம் இன உறவுகள் வாக்குறுதி அளித்தன. அதற்;குப் பல தடைகள் போடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையக்கூடியதாய் மனிதாபிமானப் பணிகளை அவர்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை கையாள்வதற்கு வசதியாக “மனிதாபிமானப் பணிக்கான அதிகாரசபை” ஒன்றுக்கு அரசு தடை விதிக்கிறது.

சர்வதேச உதவிகளுக்கும் பல நாடுகளில் வாழும் எம் உறவுகளுக்கும் பாதுகாப்பு அமைச்சு தடைகளை விதிப்பதன் மூலம் அவர்கள் தம் உறவுகளுடன் தொடர்புகொள்ளவோ உதவிகளைப் பெறவோ முடியாமற் செய்யப்பட்டுள்ளது பெரும் கேடாயுள்ளன. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் எம் மக்கள் ஆளுநர், அமைச்சர்கள், இராணுவத்தினர் தலையீடுகளுக்கு அஞ்சாமல் புதிய தென்புடன் மிகப் பெருமளவில் தங்கள் ஜனநாயகக் கடைமையை திடசங்கற்பத்துடன் வெளிப்படுத்தியிருந்தனர். அந்த மக்கள் வைத்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் எமக்கு உண்டு. உயர் நீதிமன்றில் வஞ்சக வழக்குகள் நிகழ்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கெதிராகவும் கட்சியின் யாப்புக்கு எதிராகவும் வடக்குமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கைக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்திலே எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையையும் சிங்கள பௌத்த தேசிய வாத தீவிர சக்திகளும் தமிழரசுக்கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும். எங்களை கைது செய்ய வேண்டுமென்றெல்லாம் கூக்குரலிடுவதையும் அறிவீர்கள். “ சுயநிர்ணய உரிமை எம்மினத்திற்கு உண்டு” என்று நாம் கோருவதையும் அரசியல் தீர்வுக்கு தமிழருக்குத் தன்னாட்சியும் மத்தியில் இணைப்பாட்சியும் எனும் தத்துவத்தை முன்வைப்பதையும் ஏதோ பிரிவினைக்கு வித்திட்டுள்ளார்கள் என்று விஷமப் பிரசாரங்களை செய்தும் வருவதை யாவரும் அறிவீர்கள். இதற்கு அஞ்சி நாம் எம் கொள்கைகள், இலட்சியங்களை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஊடகத்துறை அச்சுறுத்தல்கள் ஊடகத்துறைச் சுதந்திரத்திற்காகப் போராடிய, சுசந்த தேசப்பிரிய மற்றும் பலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகத்துறை நிறுவனங்கள் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஊடகவியாலர்களுக்கு எதிராகப் பொய்வழக்குகள் அச்சுறுத்தல். இந்நிலமை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழு (அ) இந்த நாட்டின் இன்றைய அரசியலமைப்பில் ஜனநாயகத்தின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித்துறைச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்பதையும் ஒரு சிறு அதிகாரத்தைக்கூட தமிழ்மக்களுக்கு விட்டுவைக்க முடியாது என்பதும் “திவிநெகும” த்திற்கு எதிரான வழக்கிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது; (ஆ) உயர் பதவி வகித்த பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க சிங்களப் பெண் ஆனாலும் அவர் “திவிநெகும” பிரேரணை மீது வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பு எமக்கு சாதகமானது ஆனால் அரசுக்கு கோபத்தை தந்துவிட்டது. அதனால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் அரசாங்க உறுப்பினாகள் நினைத்தவாறு அவர் நீக்கப்படமுடியும் என்பதேயே எடுத்துக் காட்டியுள்ளது. (இ) அரசியல் தீர்வுக்குத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டுமென அழைக்கிறது அரசு.பிரதம நீதியரசரையே நீக்குவதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழு எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமலே அரசாங்கத் தரப்பினர் மட்டும் கூடித் தீர்மானத்து பிரதம நீதியரசரை நீக்கிவிட்ட உதாரணத்தை எடுத்துக்கொண்டால் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு எப்படித் தீர்மானத்தை எடுக்கும் என்பது தெளிவானதே. இத்தகைய பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் எப்படி நம்பிக்கையை வைக்க முடியும்? இலங்கைக்கான அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு, “மாநிலங்களின் அல்லது பிராந்தியங்களின் ஒன்றியம்” எனும் கூட்டாட்சித் தத்துவம் கொண்டுவரப்படவேண்டும். முழுமையான உச்ச அதிகாரப் பகிர்வொன்றில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களின் தன்னாட்சி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும். ஆளை மாற்றுவதைவிட பேரினவாதக்கொள்கைகளும் அகற்றப்பட்டு தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும்.

18 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு ஆகக் குறைந்தது 17 ஆவது திருத்தச் சட்டமாவது மீட்கப்படவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் 1956ல் திருமலை மாநாட்டுத் தீர்மானத்தில் மூன்று விடயங்களை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். (1) சமஷ்டியின் ஓர் அங்கமாக “ஓர் சுயாட்சித் தமிழரசு” என்ற கட்சியின் நோக்கத்தை “சுயாட்சித் தமிழரசும் முஸ்லிம் அரசும்” என்று தீர்மானித்தது (2) நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதும் சுயநிர்ணய உரிமையும் தன்னாதிக்கமும் உள்ளதும் இணைப்பாட்சி முறையில் ஜனநாயக யாப்பு முறைக்குட்பட்ட ஒன்று அல்லது மேற்பட்ட மொழிவாரி அரசுகளை உருவாக்கவேண்டும் (3) “1957ஆம் ஆண்டு “ஆகஸ்ட”; 20ஆம் நாளுக்கு முன் இந்நாட்டில் இணைப்பாட்சி ஒன்றியம் ஒன்றை உருவாக்கப் பிரதமரும் பாராளுமன்றமும் தவறுமிடத்து இவ்விலட்சியத்தை அடையக் கட்சி சாத்வீக முறையில் நேரடி நடவடிக்கையில் இறங்குவதையும் தீர்மானித்தது. போராட்டக்குழு அமைத்தது. அடுத்து கட்சியின் 7ஆவது மாநாடு யாழ்ப்பாணத்தில் 1961 ஜனவரி 21இல் சீ.மூ.இராசமாணிக்கம் தலைமையில் ஆரம்பமானது. அந்த மாநாட்டிலேதான் 1961 சத்தியாக்கிரகப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த 15ஆவது மாநாட்டில் இதையொத்த ஒரு தீர்மானத்தை எடுக்க நிர்ப்பந்திக்கபட்டுள்ளோம். 1961 சத்தியாக்கிரகமும் தமிழரசு முத்திரையும் 1961 பெப்ரவரி 20 யாழ்ப்பாணத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பித்தது. அப்போராட்டத்தில் மாணவராயிருந்த நானும் கலந்துகொண்டேன். 1961 ஏப்ரல் 14ஆம் திகதி தந்தை செல்வா மாவிட்டபுரத்தில் “தமிழரசு தபால் சேவையைத்” தொடக்கி முத்திரை வெளியிட்டு ஆரம்பித்து வைத்தார். மாவிட்டபுரம் எனது ஊர் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். மீண்டும் கட்சிக்கும் சுதந்திரனுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இப்பொழுது மீண்டும் தடைசெய் கைது செய் என்று பேரினவாத சக்திகள் மிரட்டுகிறார்கள். இதற்கு நாம் அஞ்சப் போவதில்லை. இந்த அரசினால்,ஆட்சியினால், இராணுவத்தினால் பௌத்த தீவிரவாத சக்திகளினால் அ) பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் வளமுள்ள வேளாண்மை நிலங்கள், குடியிருப்பு நிலங்கள், கடல் வளங்கள், கரையோரப்பிரதேசங்கள், தினமும் ஆக்கிரமிக்கப்படுகின்றன் ஆ) நிலத்தடியிலும் நிலத்திலும் கனிம வளங்கள் இல்மனைட்,மணல்,பனைவளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன் இ) மற்றும் மனித வளம், தமிழ் மொழி, கலை கலாச்சாரங்கள்,இனப்படுகொலைகள், தமிழ்மக்களின் இனச்செறிவு, சீர்குலைப்பு அதனால் தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தான ஜனநாயக அடிப்படை உரிமைகள்,சுயநிர்ணய உரிமைத் தத்துவம்,மனித உரிமைகள்,மனிதாபிமான உருத்துக்கள் யாவுமே எம் தமிழர்,முஸ்லீம்கள் தமிழ்ப் பேசும் இனப் பிரதேச மக்கள் ஆட்சி உருத்துக்கள் அழிக்கப்படுகின்றன் ஈ) மத நம்பிக்கைகள, ஆன்ம நேயங்கள் யாவுமே எம் கண் முன்னால் பறிக்கப்படுகின்றன ஆக்கிரமிக்கப்படுகின்றன. உ) கடந்த அறுபது ஆண்டுகளில் இடம் பெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளை விட போர் முடிந்தது எனச் சொல்லியே ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ராஜபக்‌ஷ அரசு ஆட்சியாளர் அவரது அடிவருடிகளினால் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இன அடையாள அழிப்பு நடவடிக்கைகளை சொல்லிமாளாது.

எம் தமிழ் முஸ்லீம் தேசத்தில் எம் மக்கள் இனச் செறிவை அடியோடு மாற்றியமைப்பதே ((change of ethinic Composition) ஆட்சியின் திட்டமாகும். இவற்றைப் பற்றியெல்லாம் தலைவர் திரு.சம்பந்தன் 23.08.2014 புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி முன்னால் முன் வைத்த பொழுது, பிரதமர் சொன்னார், “உங்களுடைய முகபாவங்களே உங்கள் நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது. என்னை ஈர்த்துள்ளது.ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒன்றைக் கோருகின்றோம. “.வன்முறையை நாடவில்லை” என்பதையிட்டு நான் திருப்தியடைகின்றேன், நான் உங்களுடன் இருக்கின்றேன்” என்றும் கூறினார்.

அவரின் பிரதிபலிப்பை அவர் வெளியிட்ட அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார். அவர் நடவடிக்கைகள் பயனுற அமைவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அதனைப் புரிந்து கொண்டு அடுத்த நடவடிக்கைகளைத்; திட்டமிட வேண்டியுள்ளோம். அதற்காக எம்மிடம் எஞ்சியுள்ள, இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் ஒப்புக்கொள்கின்ற ஜனநாயக வழிகளில் எமது கிளர்ச்சி, போராட்டம்தான் உண்டு என்பதையும்; இந்திய நாடும் சர்வதேசமும் அதைத் தெரிந்து கொள்ளும் வகையில் அந்த அடித்தளத்திலிருந்து அதற்கும் மேலாகவும் நாம் காந்திய வழியில் ,சாத்வீக வழியில் தருமத்தில், அறத்தில் நம்பிக்கை வைத்து எம் தமிழ்ப்பேசும் மக்கள் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும், அதற்குத் தன்னாட்சிக்காகவும் நாம், இந்த மாநாடு “போராடுவோம்” என்ற தீர்மானத்தை அறிவிப்போம். வன்னி மண்ணிலே சென்ற சனிக்கிழமையும் காணாமல் போனோரைத் தேடி கண்ணீர் விட்டுக் கதறி அழும் தாய்க்குலத்தின் துயரத்தைக் கேட்டோம். என் கணவன் எங்கே? என் மனைவி எங்கே? என் பிள்ளை எங்கே? என்று வானுலகம் வரை கேட்க குரல் எழுப்புகிறார்கள். நீதி எங்கே கிடைக்கப் போகிறது. என்ற ஏக்கமும்,ஆதங்கமும் நெஞ்சைப் பிளக்கிறது. இதனால் இந்தமா சமுத்திரத்தில் பிராந்தியத்திலே வல்லாண்மை வலுமிக்க பாரதம், அதன் பிரதமர் கடந்த கால வெளியுறவுக் கொள்கையை விட இலங்கையில் தமிழத் தேசிய இனத்தின் தன்னாட்சியை நிலை நாட்டவும் சிறிய தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளவும் புதிய கொள்கையைக் கோரி நிற்கின்றோம்.

அது அவசியமெனக் கருதுகின்றோம். எங்கள் ஜனநாயகவழிப் போராட்டங்களை ஆதரிக்க வேண்டும் என வேண்டி நிற்கின்றோம். சிலப்பதிகார காவியம் தரும் பாடம் “சிலப்பதிகார காவியத்தை வடித்த இளங்கோஅடிகள் பாயிரத்திலே”இஅரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்”;. என்று ஆன்மத்தைத் திறந்து அறிவித்தார். தன் கணவனைக் கோவலனை நியாயமற்ற முறையில் கள்வன் என்று கொன்றொழித்த பாண்டிய மன்னனைப்; பவளம் பதித்த காற்சிலம்பை உடன் கொண்டு சென்று மதுரையில் அரண்மனையிலே கேட்டாள் கண்ணகி, யார் கள்வன் என்று? அந்தச் சிலம்பை சிதறடித்தபொழுது உண்மை தெரிந்த பாண்டிய மன்னன் மூர்ச்சித்து வீழ்ந்து கிடக்கின்றான்.; மதுரை மாநகரம் தீப்பற்றி எரிகிறது. இதனைக் கேட்க எம் நெஞ்சம் பற்றி எரிகிறது. அந்தக் குற்றப் பத்திரிகையைத்தான் ஐ.நா.மனித உரிமைப் பேரவை சர்வதேச விசாரனை என்று தீர்மானம் நிறைவேற்றி செயலாற்றுகிறது. அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத் தீர்மானத்தை எடுத்த நாடுகள் மட்டுமல்லாமல் நடுநிலை வகித்த இந்தியா,தென்னாபிரிக்கா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் எதிர்த்து நின்றோரையும் நாம் வென்றெடுக்க வேண்டும். சாத்வீகப் போராட்டம். அத்தோடு நாம் ஜனநாயக வழியில் சாத்வீக வழியில் அந்த நாடுகளின் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் பத்து இலட்சத்துக்கு மேலான புலம் பெயர்ந்த எம் நெஞ்சத்து உறவுகளும் ,தமிழகம் உள்ளிட்ட தமிழர் வாழும் நாட்டு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆதரவளிக்கும் வகையில் நாம் போரட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

நான் சிறைகளில் அடைக்கப்பட்ட காலங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில, பாரதி வடித்த கவிதையிலொன்று என்னைச் சோர்வற்றுத் துன்பத்தைத் தாங்கும் மருந்தாக வலிமைப்படுத்தியது. “இதம் தருமனையில் நீங்கி இடர்மிகு சிறையிப் பட்டாலும்! பதந்திரு இரண்டும் மாறிப் பழி மிகுந்திட்டாலும் விதந்தரு கோடியின்னல் விழைத்திட்டு என்னை அழித்திட்டாலும் சுதந்திர தேவி நினை நான் மறக்கிலேனே” என்ற பாடலேதான் ஐரிஸ் போராட்டக்களத்திலிருந்து பிரிட்டிஸ் அரசால் கைது செய்யப்பட்ட(Terence Mc sweiny) என்ற தேசபக்தன் எழுபது நாட்களுக்குமேல் பிரிட்டிஸ் சிறையில் உண்ணாவிரதமிருந்து சாகும் வேளையில் இரத்தத்தால் வடித்த வரிகளைப் பாருங்கள்( This Contest is one of endurance and it is not they who can suffer most who will conqer” “இப் போரட்டம் தாங்கிக் கொள்ளும் சக்தியில் தங்கியிருக்கிறது..கூடிய துன்பத்தைத் தாங்குபவர்களே இறுதியில் வெற்றி பெறுவர்” என்பதுதான். அதற்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆகவும் செயலாற்றுவர் எனும் உணர்வோடு உரிமையோடு கூட்டமைப்பில் அங்கம் வகிப்பர். போராட்டத்திற்கான கட்டமைப்பை ஒருமைப்பாட்டோடு உருவாக்குவோம் என்பதை அறுதியிட்டுக் கூறிக்கொள்கின்றேன். இதன் பொருட்டு “தேசிய சபை” உருவாக்குவதற்கு முன்னின்று உழைப்பேன் என உறுதியளிக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநாடு ஓன்றும் இந்த ஆண்டில் நடத்தவேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன். இம்மாநாட்டின் மூலம் அரசுக்கு விடுக்கும் செய்தி;- 1. இலங்கை அரசானது ஐக்கிய இலங்கை; கட்டமைப்பில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும், 2. தமிழ் இன அடையாளங்களை அழிக்கும் மற்றும் இனக்குடிப்பரம்பலை குலைக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், 3. தமிழ் முஸ்லீம் மக்களுக்குரித்ததான சொந்த நிலங்களில் அகதிகளாயுள்ள மக்கள் மீளக் குடியேற்றப் பொருத்தமாக அக் காணிகளை அபகரித்து நிற்கும் இராணுவத்தினர் வெளியேறிச் செல்ல உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; 4. தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடராமல் உடன் நிறுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டுமென்றும்; 5. காணாமல் போனோர் விடயத்தில் அரசு உண்மையைக் கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இம் மாநாட்டிலிருந்து எதிர்வரும் மூன்று மாதக் காலத்துக்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும்; அல்லது ஜனநாயக வழிகளில் சாத்வீக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு தீர்மானிக்கின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைத்து சக்திகளையும் அணிதிரட்டி ஜனநாயக வழியில் போராட்டங்களை நடாத்தவேண்டுமென்ற பொறுப்பை வரலாற்றுக் கடமையை நான் தெரிவு செய்து கொண்டிருக்கின்றேன். பாரதப்போரிலே யுத்தகாலத்திலே பார்த்த சாரதியாக நின்ற பரமாத்மா கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் போதித்ததென்னவென்றால் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்பதுதான். அதுதான் பகவத்கீதையின் அடிநாதம். எம் கடன் பணி செய்வது, ஆனால் அது தமிழினத்தின் விடுதலைக்காக பயனுறவேண்டும் என்பதுதான் எம் இதய வேட்கை. எனவே ஏற்கனவே கூறியது போல நாம் எல்லோரும் தமிழ்த்தேசத்தின் தமிழ் – முஸ்லீம், தமிழ்ப்பேசும் மக்களின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் ஒன்றுபட்டுழைப்போம் என்ற திடசங்கற்பத்துடன் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்- என்றார்.

Related Posts