Ad Widget

சாட்சியமளிக்கும் நடவடிக்கை 14ஆம் திகதி முதல் யாழில் ஆரம்பம்

dak-suntharam-arumainayagam-GAகாணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ குணதாசாவினால் யாழ்.மாவட்டத்தில் இந்த விசாரணைகள் எதிர்வரும் 14,15,16,17 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனோரின் விபரங்கள் கிராம அலுவர் பிரிவுகளாகச் சேகரிக்கப்பட்டு, பிரதேச செயலகங்களினூடாக காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தன. அதனடிப்படையில் கிராமஅலுவலர் பிரிவுகள் ரீதியாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அந்த வகையில், 14 ஆம் திகதி கோப்பாய் பிரதேச செயலகத்திலும், 15 ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், 16, மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ்.மாவட்டச் செயலகத்திலும் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்.

யாழில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கையின் ஆரம்பக் கலந்துரையாடல் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

Related Posts