Ad Widget

சஹரான் மௌலவி ஷங்ரிலாவில் இறந்துவிட்டார்! – ஜனாதிபதி

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹரான் ஹாசிம் என்ற மௌலவி இறந்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஷங்ரிலா நட்சத்திர விடுதி தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும், அதனை உறுதிப்படுத்துவதற்கு மரபணு பரிசோதனை செய்யப்படவுள்ளதென இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

அத்தோடு, 2017ஆம் ஆண்டுமுதல் சஹரான் மௌலவி இலங்கை அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இந்தியாவிற்கு தப்பிச்சென்ற அவர், அங்கிருந்து ஐ.எஸ்.உடன் தொடர்பை பேணி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார் என புலனாய்வுத்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் சஹரான் மௌலவி, தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார். எனினும், அரசாங்கத்திற்கு எதிராக அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து தமது அமைப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டதாக தௌஹீத் ஜமாத் அமைப்பு நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts