கொஸ்கம-சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு சம்பவ இடத்திற்கு பயணம் செய்து நேரில் ஆய்வுசெய்த அமைச்சர் பின்னர் கருத்து வெளியிடுகையில்,
சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடிக்கத் தொடங்கியதால் அதன் அருகில் எவரும் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அது அணையும் வரை காத்திருக்கவேண்டிய தேவையேற்பட்டது.
இதனால் நாம் உயிர்களைப் பாதுகாக்கவே முன்னுரிமை வழங்கினோம். அதற்குப் பின்னரே எப்படி விபத்து ஏற்பட்டது. என்ன நடந்தது என ஆராய்வோம்.
மேலும் நான் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதையடுத்து 6கிலோமீற்றர்கள் வரை மக்களை வெளியேற்றத் தேவையில்லையென அவர்கள் கூறினார்கள். ஏனென்றால் வெடிப்புச் சிதறல்கள் 1கிலோமீற்றருக்குட்பட்ட பகுதியிலேயே விழும் சாத்தியம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதனால் 2 கிலோமீற்றருக்குட்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றினோம் எனவும் தெரிவித்தார்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக எதுவும் கூறமுடியாது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்த அவர் இதனை நிராகரிக்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
இதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.