Ad Widget

சம்பந்தன், மாவை தலைமையில் தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டம் திருமலையில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனது பிரதான மே தினக் கூட்டத்தை இணைந்த வடக்கு – கிழக்கின் தலைநகரமான திருகோணமலையில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளால் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

தெற்கில் மே தினக் கூட்டங்கள் அரசியலை முன்னிலைப்படுத்தி சூடு பிடித்துள்ளன. நாட்டில் பிரதான இரு கட்சிகளும் தென்னிலங்கையில் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவுத் தரப்பினர் தனியானதொரு மே தினத்தைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுசெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts