தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கைதிகளின் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு முன்னெடுத்த கலந்துரையாடலில் மேற்கொண்ட தீர்மானங்களை அறிவிக்க மகஸீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே, அவர்கள் இவ்வாறு கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக இவ்வாறு உண்ணாவிரதத்தை முன்னெடுத்த போது, அவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்.சம்பந்தன் வாக்குறுதி அளித்த போதும், அவர் அதனை நிறைவேற்றவில்லை என, கைதிகள் இதன்போது கூறியுள்ளனர்.
இதனாலேயே எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததாக சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.