Ad Widget

சமஷ்டி பிரிவினையல்ல; விக்னேஸ்வரன்

vicknewaran-tnaசமஷ்டி என்பது பிரிவினையல்ல என்பதை சட்டம் படித்த ஜனாதிபதிக்கு தெரிந்திருக்க வேண்டுமென்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களுக்கான தீர்வு என்ன என்பது பற்றி அரசாங்கத்தினால் கூறப்படவில்லை. எந்த தீர்வும் இதுவரையிலும் முன்வைக்கப்படவுமில்லை, நாங்கள், எங்களின் அபிலாஷைகளை முன்வைத்தால், அதற்கும் குறை கூறுவார்கள்.

மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் ஒரே காலத்தில் நடைபெற இருப்பதால், சிங்கள மக்களுக்கு ஏதாவது கூறுவுதற்காக இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள் போல் இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

சட்டம் படித்த ஜனாதிபக்கு சமஷ்டி தெரிந்திருக்க வேண்டும். சமஷ்டி என்பது பிரிவினையல்ல அப்படி இருந்தும் கூட புலிகள் வைத்த அதே கோரிக்கையினை தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்கின்றது என்று கூறுவது சரியில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை புரிந்து கூறுகின்றாரா, புரியாமல் கூறுகின்றாரா என்பது தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு ஒப்பாக எடுக்கப்பட்ட விடயங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளோமே தவிர, அவ்விடயங்கள் சட்டத்திற்கு புறம்பானதல்ல, சர்வதேச உடன்படிக்கைகள் சரியென்று, எதை கூறிப்பிட்டனவோ, அதை தான் நாம் உள்ளடக்கியிருக்கின்றோம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தனிப்பட்ட மதம்,பொழி கலாசார பின்னணி தனித்துவத்தினை எடுத்துக் காட்டும் வண்ணமாக தகைமைகள் இருப்பதால், சுயநிர்ணய உரித்து இருக்கின்றது. அதில், இரண்டு வகையான சுயநிர்ணய உரித்து இருக்கின்றது.

அந்தந்த நாடுகளில் இருக்கும் தனிநாடுகள்; 1945 ஐக்கிய நாடுகளில் அங்கத்துவம் வகித்த நாடுகள், அங்கிருக்கும் நாடுகளை பிரிப்பதற்கு இணங்க வில்லை. அந்த வகையில், தான் இலங்கை அரசாங்கத்திற்கு, போரின் போது பல உதவிகளை செய்துள்ளன. ஏனென்றால், நாட்டினை பிரிக்க கூடாது என்ற நோக்கத்திற்காக என்றும் அவர் கூறினார்.

அத்துடன், உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்றும் இதில் உள்ளக நிர்ணயத்தினை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம், பிரிந்து போவதாக எங்கும் குறிப்பிடவில்லை என்றும், வெளியக சுயநிர்ணயத்துடன், உள்ளக சுயநிர்ணய கோரிக்கையினை இணைந்து விளங்காதவாறு ஜனாதிபதி அறிக்கை விட்டிருப்பது மன வருத்தத்தினை தருகின்றதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் தீர்வினையும் தறாது, எங்களின் தீர்வினை காரணம் காட்டி இல்லாது ஒழிக்க பார்க்கின்றார்கள் என்றும், பயங்கரவாதிகள் நாட்டைப்பிரிக்க பார்க்கின்றார்கள் என்று கூறுவார், தேர்தல் அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறுவார்கள். இவ்வாறு உரிமைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதற்கான முடிவுகளை எடுக்கின்றார்களே தவிர, எந்தவொரு தீர்வினையும் தாரது, எங்களை பயங்கரவாத கண்களோடு சர்வதேசம் பார்க்கும் என்ற எண்ணத்தோடு கூறிவருகின்றார்கள்.

சர்வதேசம் விழுந்து விடும் என்று எண்ணுகின்றார்கள் போல் இருக்கின்றது. சர்வதேசத்திற்கு தெரிந்து விட்டது, என்னத்திற்காக இவர்கள் இப்படி செய்கின்றார்கள் என்று ஆனால் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டுமென்றும் அவர் மேலும் கூறினார்.

Related Posts