Ad Widget

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தத் தவறினால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்லவேண்டிய நிலை ஏற்படும்!

சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

sambanthan 1_CI

நேற்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிலைகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் நடைபெற்ற விளக்கம் அளிக்கும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-

இன்று இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் சர்வதேச சமூகத்துக்கு முன்னால் கொண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.நா.சபையின் மனித உரிமை குழுவுக்கு முன் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருகின்றன. அதன் நிமித்தம் சர்வதேச விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன.

ஐ.நா .சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வருடம் மார்ச் மாதம் வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு, தான் ஐ.நா. சபையினுடனும் மனித உரிமை பேரவையுடனும் ஒத்துழைக்கத் தயார் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அந்த விசாரணை வெளியிடப்படுவது இவ்வருடம் ஒக்ரோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் நிலைமைகளைப் பொறுத்தவரை உண்மைகள் அறியப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நடைபெற்ற வேண்டத்தாகத சம்பவங்கள் இலங்கையில் மீண்டும் நடைபெறக்கூடாது என்பது அவர்களின் உறுதியான நிலைப்பாடு.

விசேட அறிக்கையாளர்கள் கூட சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்கள். எனவே இவற்றை ஒட்டு மொத்தமாக அவதானிக்கின்ற போது எமக்கொரு நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகி இருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். புதிய தேர்தல் முறை சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அது சம்பந்தமாக தீர்க்கமான முடிவு அரசாங்கத்தினால் இன்னும் எடுக்கப்படவில்லை. அரசாங்கம் புதிய தேர்தல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுக்கும் போது அந்த முடிவின் அடிப்படையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் நாம் பங்கு கொள்வோம்.

இன்றைய அரசியல் சூழ்நிலை பற்றி நாம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதியினால் ஒரு செயலணி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளோம். வட கிழக்கில் விசேடமாக தமிழ் மக்கள் மத்தியில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் ஒரு செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது. இச்செயலணியை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் சென்றவாரம் சந்தித்து உரையாடினோம்.

நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சம்பந்தமாக உண்மைகள் அறிந்து – நீதி வழங்கி, அதன் மூலமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் – நல்லிணக்கம் ஏற்பட்ட பின்பு மீண்டும் இவ்விதமான சம்பவங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கப்படவேண்டுமென்றும் கூறினோம். அதற்காக சில திட்டங்களை வகுத்து அதன்படி செயற்பட அரசாங்கம் தயாராகி வருகின்றது. இது இன்றைய நிலை.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி பிரிவிலும் இதுவரை காலமும் காணி அபகரிப்புக்கள், தொழில்சார் விடயங்கள், புனர்வாழ்வு, கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், காணாமல் போனவர்கள், விதவைகள், வாழ்வாதாரம் சம்பந்தமாக அனைத்து தரவுகளையும் உண்மை நிலைமைகளையும் சேகரித்து ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது.

கலாசார மையங்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்பன கடந்த காலங்களில் அளிக்கப்பட்டுள்ளன. இவை சம்பந்தமாக போதிய விவரங்களையும் தரவுகளையும் சேகரித்து ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சமர்பிப்பதன் மூலம் நல்லதொரு தீர்வை இவற்றுக்கு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகி இருக்கின்றது. அதை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. – என சம்பந்தன் தெரிவித்தார்.

Related Posts