Ad Widget

சட்டவிரோத விகாரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் : வடக்கு முதல்வர்

வடமாகாணத்தில் பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவற்றால் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் வளரும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் விகாரை உரிய அனுமதிகள் பெறப்படாமல் கட்டப்படுவதாக அறிந்துள்ளேன். இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் முதலமைச்சர் எடுக்க வேண்டும் என விசேட கவனயீர்ப்பு ஒன்றினை சபையில் முன் வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், நாவற்குழி விகாரை உரிய அனுமதி பெறப்பட்டா கட்டப்படுகின்றது என்பது தொடரில் நிச்சயம் ஆராய்வோம் எனவும் இதே போன்றே முல்லைத்தீவில் கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைக்கப்படுகின்றதென தெரிவித்தார்.

அதேவேளை நேற்றய தினம் (வியாழன்) தென்னிலங்கையில் இருந்து 300 பௌத்த பிக்குகள் நாவற்குழிக்கு வந்து பௌத்த சமய வழிப்பாட்டில் ஈடுபட உள்ளதாகவும் , எனக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிந்து கொண்டேன் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவைத்தலைவர் , நாவற்குழி பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமம். அங்கே புதிய சிங்கள கிராமம் ஒன்று தற்போது உருவாகி வருகின்றது. அது எமக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றது என தெரிவித்தார்.

Related Posts