Ad Widget

கோப்பாய் கல்வியியற் கல்லுாரியில் 350 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதி!!

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. அங்கு 100 வீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

நேற்று மாலை 18 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் 18 பேரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமை ப்படுத்திலிருந்து அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மேலதிகசிகிச்சைக்காக கோப்பாய் விசேட சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

மேலும் கோப்பாய் பிரதேசத்தில் உள்ள மக்கள் பீதி அடையத் தேவையில்லை ஏனெனில் நோயாளர்கள் சரியான முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்களிடமிருந்து வெளியேறும் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டு தெல்லிப்பளையில் எரியூட்டப்படுகிறது.

எனவே சமுதாயத்திற்கோ அல்லது அப்பகுதி மக்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக யாழ். போதனாவைத்தியசாலை வைத்தியர்கள் பலர் மிக அவதானமான முறையில் அவர்கள் சுய பாதுகாப்பு அங்கிகள் அணிந்து சேவையை வழங்கி வருகின்றார்கள்.

ஆகவே பொதுமக்கள் அருகில் இருப்பவர்கள் இது தொடர்பில் பயப் பீதி அடையத் தேவையில்லை தங்களுக்கு ஏதாவது முறைப்பாடுகள் இருக்குமாயின் இருந்தால் போதனா வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ள முடியுமெனவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 400 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள கூடிய வசதிகள் காணப்படுகின்றன வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களினை பயன்படுத்தி 7 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள் காலையில் எட்டு மணிக்கு பரிசோதிக்கப்பட்டு இரவு 7 மணிக்கு முடிவுகளை வெளியிட கூடியவாறாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன இன்றைய நாள் வரை யாழ்.மாவட்டத்தில் சமுகத்தொற்றில்லை.

எதிர் வரும் காலங்களில் நடைபெறுபவற்றை சரியாக எதிர்வு கூறமுடியாது பொதுமக்கள் சரியான விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் சமூகத் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Related Posts