Ad Widget

கொழும்பு, வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கொழும்பு, அவிஸ்ஸாவெல்ல, பியகம மற்றும் வவுனியாவில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு இவ்வாறு புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவை மிக வேகமாக பரவுக்கூடும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ், தற்போதுவரை 50 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸால், நோயாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய வைரஸ், உலகம் முழுவதும் புதிய கொரோனா அலையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நாள்தோறும் 800க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேபோன்று கடந்த சில வாரங்களாக ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், வவுனியா மாவட்டம் ஒரு இடைநிலை ஆபத்துள்ள பகுதி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Posts