Ad Widget

கொழும்பில் சிக்கியது பொட்டம்மானின் தொப்பி? -லண்டனுக்கு அனுப்ப முயன்ற இருவர் கைது

நாரஹேன்பிட்டியில் கூரியர் நிறுவன தலைமையகம் ஒன்றில் மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனுக்கு அனுப்பப்பட இருந்த குறித்த தொப்பி விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி செய்துகொள்ள தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வவுனியாவைச் சேர்ந்த குறித்த இருவரையும் அங்கு வைத்தே கைது செய்ததாகவும் அவர்களை நேற்று முன் தினம் புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் அதன் போது அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்து பிரத்தியேக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் நாரஹேன்பிட்டியில் தலைமையகத்தைக் கொண்ட விரைவுத் தபால் நிறுவனம் ஒன்றிற்கு லண்டன் நோக்கி அனுப்ப பொதியொன்று அனுப்பட்டுள்ளது. காட் போர்ட் பெட்டியினாலான அந்த பொதியில் ஏற்பட்ட சந்தேகத்தால் அதனைப் பிரித்து அந்த நிறுவனம் சோதனை செய்துள்ளது.இதன் போது அந்த பொதியில் 6 ரின் மீன்கள், 4 பால் ரின்கள், 4 பெட்சீட்டுக்கள் மற்றும் ஒரு காற்சட்டை ஆகின இருந்துள்ளன. காட்சட்டையின் பைக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொப்பியொன்றி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்தே நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன் போது குறித்த தொப்பியானது தமிழீழ விடுதலை புலிகளின் உயர் மட்ட தலைவர்கள் பயன்படுத்துவது என கண்டறிந்த பொலிஸார், அந்த பொதியானது குறித்த விரைவுத் தபால் நிறுவனத்தின் வவுனியா கிளையில் இருந்து கொண்டு வரப்பட்டு முகத்துவாரத்திலிருந்தே நாரஹேன்பிட்டி தலைமையகத்துக்கும் அனுப்பட்டுள்ளதை உறுதி செய்துகொண்டனர்.இதனையடுத்து வவுனியா சென்ற விஷேட பொலிஸ் குழுவொன்று கடந்த வாரம் வவுனியாவில் உள்ள குறித்த நிறுவனத்தின் கிளைக்கு சென்று அங்கிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமராவை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியொன்றில் வரும் இருவர் அந்த பொதியை அங்கு ஒப்படைப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டியில் வந்ததாக சந்தேகிக்கப்பட்ட வவுனியா – மன்னார் பஸ் வண்டி ஒன்றின் சாரதியான ஒருவரை பொலிஸார் முதலில் கைது செய்துள்ளனர். அதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய வவுனியா, பூவரசங்குளத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விருவரையும் பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்துவந்த நிலையிலேயே நேற்று முன் தினம் புதுக்கடை 3 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த பொதியானது லண்டனில் உள்ள இலங்கையரான ஒருவருக்கு அனுப்பட இருந்தமையும் சந்தேக நபர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல்தெனிய ஆகியோரின் மேற்பார்வயில் உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த சொய்ஷாவின் ஆலோசனைக்கு அமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts