Ad Widget

கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 41 ஆக பதிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராகமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்தமையினால் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ராஜகிரிய பகுதியில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 51 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.

கடந்த 7 ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு – 10 பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தார்.

கடந்த மாதம் 23ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், கம்பஹா உடுகம்பல பகுதியைச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட நிமோனியா நிலை காரணமாக அவர் உயிரிழந்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர, 55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் குறித்த வேறு எந்தவித தகவலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts