கொடிகாமத்தில், பொலிஸாரை தாக்க முயற்சி!

attack-attackவிசாரணையொன்றுக்காக சென்றிருந்த பொலிஸார் இருவர் மீது இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளது.

இந்த சம்பவம் கொடிகாமம், தென்மராட்சி பாலாறு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார் அந்த வாகனத்தினை கைப்பற்றுவதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.

அவ்வேளை அங்கு வந்த சிலர் வீதிக்கு குறுக்காக கட்டைகளைப் போட்டு பொலிஸ் வாகனத்தை மறித்து அந்த வாகனத்தை செல்லவிடாமல் தடுத்தனர்.

பொலிஸ் வாகனத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பொலிஸார் இருந்தமையினால் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸாரும் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அதற்குள் குறித்த டிப்பர் வாகனம் மணலை கொட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. வீதியை மறித்தவர்களும் தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்நிலையில், மேற்படி பிரதேசத்தில் வேறு ஒரு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸார் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுள்ளனர்.

அவ்வேளையில் அங்கு குழுமியிருந்த இளைஞர்கள் குழுவொன்று, நீங்கள் தானே மணல் அள்ளுவதைத் தடுக்க நேற்று வந்தனீர்கள் என கேட்டுக்கொண்டே பொலிஸாரைத் தாக்க முயற்சித்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு தப்பிச்சென்றுள்ளனர்.

Related Posts