Ad Widget

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க தீர்மானம்

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு, கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச சபையிடம் கோரப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நல்லூர் பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோம்பயன் மணல் மயானத்தில் மாத்திரமே மின் தகன மேடை உள்ளது.

தற்போது கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையால், யாழில் உள்ள ஒரு மின் தகன மயானத்தில் சடலங்களை எரியூட்ட முடியாத நிலையில் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் தேங்கி காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts