Ad Widget

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு சென்றவர் மின்னல் தாக்கி பலி

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் மின்னல் தாக்கி உடல் கருகி பரிதாபமாக மரணமடைந்தார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் சந்தியை அண்மித்த வேளை நடைபெற்றது.

இதில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட் டாரத்தைச் சேர்ந்த நடராசா ரவி (வயது 50) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற பிரஸ்தாப நபர் நெடுங்கேணி மன்னா கண்டல், முத்தையன்கட்டு ஆகிய பகுதிகளில் இருந்து மரக்கறி வகைகளை கொள்வனவு செய்து மேற்படி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுவது வழமையாகும்.

இந்நிலையில் அன்றைய தினம் தனது வியாபார நடவடிக்கையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் கடும் இடி மின்னலுக்கு மத்தியில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கையில் மன்னா கண்டால் சந்தியை அண்மித்த வேளை திடீரென மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் எரிகாயங்களுக்கு ஆளாகி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

Related Posts