வடமாகாண கூட்டுறவு அமைப்புக்களின் இணைந்த மே தினக் கொண்டாட்டம், இம்முறை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, மாங்குளம் நீர்ப்பாசனத் திணைக்கள மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(21) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண கூட்டுறவு ஆனையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் கே.கணேஸ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மேதினத்தன்று பிற்பகல் 2 மணிக்கு நல்லூர் சங்கிலியன் தோப்பிலிருந்து ஊர்திகளின் ஊர்வலம் ஆரம்பமாகி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து 10 ஊர்திகளும் மன்னாரிலிருந்து 2 ஊர்திகளும், வவுனியா மாவட்டத்திலிருந்து 4 ஊர்திகளும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து தலா 3 ஊர்திகளும் ஊர்திப் பவனியில் பங்கெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.