Ad Widget

கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகிறது: சகாதேவன் குற்றச்சாட்டு

tnaசர்வதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சதி செய்கிறதா என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது தமிழ் மக்களையும் போராளிகளையும் பொறுப்பு எடுக்க தவறியதன் மூலம் இறுதிக்கட்டத்தில் போராளிகள் உட்பட ஏராளமானோர் பலியாவதற்கும் தமிழரின் போராட்டம் அழிந்து போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதி திட்டம் தான் காரணமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், தமிழ் மக்களை மீள முடியாத நிரந்தர அழிவிற்குள் இட்டுச்சென்றுவிடப்போகிறது என்பதே எமது பெருங்கவலையாக உள்ளது.

தம்மிடம் 22 பாராளுமன்ற உறுப்பினர்களின் பலம் இருந்த போதும் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் அழிவுச் சமரில் இருந்து மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு வீரமரணம், தமிழ்த்தேசியம் என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி தப்பித்துக் கொணடு வருகின்றது.

ஜக்கிய நாடுகள் அறிக்கையின் மூலமாக தமிழ் மக்களுக்கு எவ்விதமான விமோசமும் கிடைக்காது. இது தமிழ் மக்களின் அவலத்தினை காரணம் காட்டி நடைபெறும் சர்வதேச அரசியல் வியாபாரமாகும்.

அரசாங்கத்தை நோக்கி வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டும் முன்னாள் புலிகளையும், யுத்த வலயத்திலிருந்து மீண்டு வந்த மக்களையும் ஏன் ஒவ்வொரு தமிழினையும் பாதிக்கும் என்று கூறி வந்தோம்.

ஆனால், இப்போது நடப்பது என்ன? புனர்வாழ்வு பெறாத சகல போராளிகளையும், இனங்காணும் வேலைத்திட்டத்தினை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதனால் கிளிநொச்சியில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

இப்படி ஒன்று நடைபெற்றால் சர்வதேசம் தலையிடும் என்றும், அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்றும் கூட்டமைப்பு நாடகம் ஆடக்கூடும். கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும், அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு எமது மக்கள் பலிக்கடாவாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அரசியல் தொடர்பான ஆலோசனைகளை பணத்திற்கு விற்பனை செய்யும் முகவர் நிறுவனத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது எதற்காக? இராணுவ புலனாய்வு அமைப்புடன் தொடர்புடைய நிறுவனத்தில் கூட்டமைப்பு தொடர்பு வைத்து ஆலோசனை பெறுவது எதற்காக? தமிழ் மக்களை காப்பாற்றவா? அல்லது, தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து உங்கள் பதவிக்கதிரைகளை காப்பாற்றிக்கொள்ளவா?

இனியும் இரட்டை வேடம் போட்டு தமிழ் மக்களை ஏமாற்றினால் உங்கள் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே உங்கள் அனைவரையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவர் என்றும் அவர் சொன்னார்.

Related Posts