Ad Widget

கூட்டமைப்புக்கு தடை விதிக்குமாறு கோரும் சங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காதிருக்கும் வகையில் தடை விதிக்குமாறு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

anantha-sankaree

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு கடந்த மார்ச் 30ஆம் திகதியிட்டு ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எனது ஆட்சேபனைக்குரிய காரணத்தை தங்களை இலகுவாக விளங்கவைக்க த.தே.கூ ஆரம்பித்த காலம் தொட்டு கடைசியாக உபயோகிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றது வரையான வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். குழப்பங்களும் தவறான அபிப்பிராயங்களும் ஏற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கென உரிய சின்னம் இல்லாதுள்ளமையே முக்கிய காரணமாக உள்ளது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்சிகளாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தழிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஒன்றிணைந்து கடந்த 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, ஓர் பொதுத் திட்டத்துக்குள் இயங்க தீர்மானித்தன.

இந்நழலையில், இரா.சம்பந்தன், நா.குமரகுருபரன், சு.பிரசன்னா, க.பிரேமச்சந்திரன் ஆகிய செயலாளர்கள் ஒப்பமிட்டு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் இந்த அமைப்பு போட்டியிட இருப்பதாக அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு விடுத்தன.

அந்த புரிந்துணர்வுக்கு அமைய நான்கு கட்சிகளும் அத்தேர்தலில் போட்டியிட்டு தேர்தலில் த.வி.கூ – 6, அ.இ.த.கா – 3, த.வி.இ – 4, ஈ.ம.பு.வி.மு – 1 என்ற அடிப்படையில் தேசிய பட்டியலில் 1 ஆசனங்களைப் பெற்றன. மாவை சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் இடத்தைப் பெற்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் இடத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் வரை எல்லாம் நல்லபடியே நடந்தது. புதிய தலைவரின் தெரிவுக்கான கூட்டத்தினம் நிர்ணயிக்கப்பட்டு, நானே அப்பதவிக்கு புதிய தலைவராக தெரிவானேன். அக்கூட்டத்துக்கு சமூகம் கொடுக்காத முக்கிய பேர்வழி மாவை சேனாதிராசா தான்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3,000 வாக்கு வித்தியாசத்தில் அவர் எனக்கு அடுத்ததாக தெரிவானார். அதற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டு காலியாக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அதன் பின் காலியாகிய கலாநிதி. நீலன் திருச்செல்வத்தின் இடத்துக்கும் மாவை சேனாதிராசாவையே நியமித்தோம்.

மாவை சேனாதிராசா அடிக்கடி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து வந்தார். அப்படி ஒரு சந்திப்பின் போது ‘மாவை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்தார்’ என்ற தலைப்பில் ஓர் செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தி இதுதான். ‘தமிழரசுக் கட்சியை புனருத்தாரணம் செய்துகொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உபதலைவர் தங்கனுடன் பல சந்திப்புக்கள் மேற்கொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் புனரமைப்பு விடுதலைப் புலிகளின் பணிப்பிலேயே நடைபெறுகிறது’ என்பதே அந்த செய்தியாகும்.

அவ்வேளையில் அவர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவருக்கு விசேட பணி கொடுக்கப்பட்டிருந்தது. 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகிய அவரின் பேட்டி ஒன்றில், ‘தமிழர் விடுதலைக் கூட்டணி, தலைமையை இல்லாது செய்வதற்காகவா தமிழரசுக் கட்சியை புதுப்பிக்குமாறு விடுதலைப் புலிகள் உங்களைப் பணித்துள்ளனர் என்று நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருந்த மாவை, ‘அதில் உண்மை இல்லை. இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன்’ என்றிருந்தார்.

என்னை அகற்றும் முயற்சி தோல்வி கண்டதும் மாவை சேனாதிராசா தன்னிச்சையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அகற்றிவிட்டு அந்த இடத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்த்துக்கொண்டு புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.

அவரின் இந்த செயலால் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தானாக செயலிழந்துவிட்டது. சேனாதிராசாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு முற்றுமுழுதாக புதிய அமைப்பாகும். ஆகவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரால் எதையும் செய்யமுடியாது என்பதே.
புதிய கூட்டமைப்பு மோசடி மூலம் முறையான அதிகாரமும் இன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து அதன் பெயரில் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓர் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து அதில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் தேசிய தலைமை என்றும் அவர்களே தமிழ் மக்களின்; ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் மிகப்பெரும் அளவில் வாக்களிப்பில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது. தேர்தல் அவதானிப்பு குழுவினாரால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாக்களிப்பு நிலைய முகவர்களால் தமது கடமைகளை செய்ய முடியவில்லை. தமக்குரிய வாக்குகள் அன்றி பிறரின் வாக்குகளை ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் தாராளமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலைமை கூட்டமைப்பு கட்சிகளுக்கு 22 ஆசனங்களைப் பெற உதவியது. இத்தேர்தலை நிராகரிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் விடப்பட்ட கோரிக்கை சட்டத்தினால் அதற்கு இடமில்லையென கூறி தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

மோசடி மூலமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு, பிழையான ஓர் செயலை திரும்பத் திரும்ப செய்தால் குறிப்பிட்ட ஓர் காலத்தின் பின் அதை சட்டபூர்வமான செயலாக உரிமை கொண்டாட முடியாதல்லவா. அவர்களால் அனுபவிக்கப்பட்டு வந்த வசதி அவர்களுக்கு சர்வதேச அரங்கில் புதியதோர் அந்தஸ்தை பெற்றுத்;தந்துள்ளது. அப்பாவித் தமிழ் வாக்காளர்கள் தான் இப்போது கிரிமினல்வாதிகள் என்ற அவப் பெயரை சுமக்கின்றனர்.

குற்றம் செய்தவர்கள் என்ற பெயரை அப்பாவித் தமிழ் வாக்காளர்களே தற்போது சுமந்து நிற்கின்றனர். 2004ஆம் ஆண்டு தேர்தல் நடந்ததில் இருந்து பிரபாகரன் இறந்தது வரையான காலத்தில் செய்த குற்றங்கள் அத்தனைக்கும் பொறுப்பென நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

இவற்றுள் லக்ஷ்மன் கதிர்காமர், ஜோசப் பரராஜசிங்கம், சந்திரநேரு, கிங்ஸ்லி இராசநாயகம். சட்டத்தரணி நடராஜா ரவிராஜ், தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள் உட்பட இன்னும் பல அடங்கும்.

இந்த சூழ்நிலையில் தங்களுக்குரிய அதிகாரத்தை உபயோகித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காது தடை விதிக்குமாறு வற்புறுத்தி வேண்டுகிறேன். நான் உங்களை மேலும் மன்றாட்டமாக கேட்பது இந்த நான்கு கட்சி கூட்டமைப்பினரால் அப்பாவி வாக்காளர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் புலி என்ற பட்டியும் அகற்றப்பட வேண்டும்.

அப்போதுதான் மக்கள் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குகள் புலிகளுக்கு அளிக்கப்பட்டவை என கணிக்கப்படாதுபோகும். இந்த வியாபாரத்தில் பயனடைந்தவர்கள் தமிழரசுக் கட்சியினரே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எல்லா விடயங்களிலும் சிங்கத்தின் பங்குபோல் அவர்களுக்கு கிடைத்தன. தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே, அதன் ஸ்தாபகர் இறந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்தாபகரும், அவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் தமிழரசுக் கட்சியை செயலிழக்கச் செய்து, அதன் வாரிசாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இயங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டனர் என்பதை, சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை என எண்ணுகிறேன்.

எனது ஆதங்கம் அவர்கள் என்னை விடுதலைப் புலிகளை உபயோகித்து வெற்றிகரமாக சதி செய்து அரசியலில் இருந்து ஒதுங்க வைத்தனர் என்பதேயாகும். தமது சொந்த நலனுக்காக விடுதலைப் புலிகளாகவும், புலிகளின் ஆதரவாளர்களாகவும் இயங்கி வந்த சிலர் அப்பாவித் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி பெரும் இலாபம் அடைந்துள்ளனர்’ என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts