வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்து, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பதில் முதலமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் ஒன்று கூடி ஒரு தீர்மானத்தை எடுத்தனர்.
அதன்படி வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும். எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அதற்கான வேலைகளை முதலமைச்சர் ஆரம்பிக்க வேண்டும். இல்லையேல் தாண்டிக்குளம் காணியை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனைவரதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக இணைத்தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
அதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டெனீஸ்வரன், இத் தீர்மானம் எதற்கு..? தாண்டிக்குளம் தான் எனது விருப்பம். அதை தரவில்லை. தற்போது ஏன் மீண்டும் குழப்புகிறீர்கள் என அமைச்சர் றிசாட்டிற்கு ஆதரவாக கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக கருத்து முன்வைத்தார்.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் நீண்ட காலமாக இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.