தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.
அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படும் என்றார்.
இதேவேளை பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்திற்குள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.