Ad Widget

குளிரூட்டப்பட் அறையில் உள்ளவர்கள் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும்: ஸ்ரீதரன்

கொழும்பில் குளிரூட்டப்பட் அறையில் இருந்து தீர்மானம் எடுக்கும் அமைச்சர் வடக்கில் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பொருத்து வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு பொறுத்தமற்றது என்றும் இதற்கு பதிலாக 10 இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கினால் மக்கள் அவர்களுக்கு தேவையான வகையில் வீட்டை அமைத்துக் கொள்வார்கள் என்றும் இதன் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அவர்கள் அமைத்துக் கொள்ளும் வீட்டில் அவர்களுக்கு ஏற்ற வகையில், அவர்களே வளங்களை அமைத்துக் கொள்வார்கள் எனவும் இதனை உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற திட்டங்கள் மக்களின் நலன் சார்ந்தவை எனவும் அதனை பலவந்தமாக மக்களுக்கு வழங்கினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துயரத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் சிவஞானம் ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டார்.

Related Posts