குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க யாழ் மாவட்ட செயலகத்திற்கு என தனி தொலைபேசி இலக்கம் வழங்கப்படவள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் வலயம் மற்றும் கல்வி பணிப்பாளர்களுடன் மாணவர் மத்தியில் காணப்படும் போதை பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் என்பவற்றை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
சில பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பாவனை காணப்பட்டாலும் அதிபர்கள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அவர்களுக்கு அறிவித்தாலும் ‘எங்கள் மாணவர்கள் அப்படியில்லை’ என கூறுகின்றார்கள்.
பிள்ளைகள் குற்றம் செய்தார்கள் என்று கூறினாலும் ‘எமது பிள்ளை குற்றம் செய்யாது’ என சில பெற்றோர்கள் உண்டு. அதிபர்களும் அவ்வாறு உள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதைபொருள் பாவனையை தடுக்க வேண்டும் என்ற சமூக பொறுப்பு எல்லோர் மத்தியிலும் காணப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தே கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.