“இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர நாம் முயற்சிக்கின்ற வேளையில், ஆங்கில ஊடகம் ஒன்று, தவறான செய்தியை வெளியிட்டுள்ளது” என, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (17) யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையில் இரத்த தானம் வழங்குவதில் சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
“அந்த நிலைமையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆங்கில ஊடகம் ஒன்று தவறான செய்தியை வெளியிட்டது. அதற்கு நாம் கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும், வெளியிட்டு இருந்தோம்.
“இரத்த தானத்தில் சிறந்த மாவட்டமாக, யாழ்ப்பாணத்தைக் கொண்டு வர, குருதி கொடையை ஊக்குவிக்க அனைவரும் முன்வர வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில், கலந்துகொண்ட வைத்தியர் உமாசங்கர் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஆங்கில ஊடகம் ஒன்று, சாதிப்பிரச்சினையையும் இரத்ததானத்தையும் தொடர்புபடுத்தி நயவஞ்சக சிந்தினையில் செய்தி வெளியிட்டது.
“நாம் அச்செய்தியை மறுத்து, மறுப்பு அறிக்கை கொடுத்த போது, அதனையும் இருட்டடிப்பு செய்துள்ளது. எந்த நிகழ்சி நிரலில் அந்த செய்தியை வெளியிட்டார்கள் எனத் தெரியவில்லை. இவ்விடயம் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஆங்கில பத்திரிகையில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரை மேற்கோள் காட்டி, சாதிய அமைப்பு தொனிப்பட செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் மறுநாள் அச்செய்திக்கு மறுப்பு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.