Ad Widget

குருணாகல் மருத்துவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள்!!

சந்தேகத்துக்கு இடமான வகையில் சொத்துத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலை மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சை செய்தார் என பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக சுமார் 4 ஆயிரம் சிங்களப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையை மேற்கொண்டார் என்று திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று நாடாளுமன்றில் சபாநாயகர் தெரிவித்ததுடன் பொலிஸாரும் செய்தியில் ஆதாரம் இல்லை என அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அவரது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைச் சேகரித்துள்ளார் என சந்தேகம் எழுந்தது.

இரகசிய பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து வெள்ளிக்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்ட மருத்துவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபியிடம் 40 கோடி ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபியின் பெயரில் உள்ள 17 காணி உறுதிப் பத்திரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் காணிகள் குருணாகலை சூழவுள்ள இடங்களில் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வருமானத்துக்கு மேலதிகமாக அவருக்கு அடிப்படைவாத அல்லது பயங்கரவாத குழுவிடமிருந்து பணம் கிடைத்துள்ளதா? என்பது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகநபரான மருத்துவர் சேகு சியாப்தீன் மொகமெட் சாபி, சட்டவிரோதமாக கருத்தடை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாடுகளில், நான்கு முறைப்பாடுகள் அவருடன் பணியாற்றிய மருத்துவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், 28-30 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் இருவரும் தமக்கு கருத்தடை சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டதா என மருத்துவரிடம் விசாரணை நடத்துமாறு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

சில பெண்களுக்கு மேற்கொண்ட மூன்றாவது மகப்பேற்று சத்திரசிகிச்சையின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய எல்.ஆர்.ரி அறுவைச் சிகிச்சையை முன்னெடுக்காது, அது மேற்கொள்ளப்பட்டதாக போலியாக பதிவிட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் தாதி அதிகாரியொருவர், மகப்பேற்று சத்திரசிகிச்சையின் பின்னர் தமது கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளதாக சந்தேகநபரான மருத்துவர் மீது குற்றஞ்சாட்டி வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் எழுத்துமூல முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

தமது கர்ப்பப்பை அகற்றப்பட்டதை பின்னரே அறிந்துகொண்டதாக அந்த தாதி அதிகாரி, வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரான மருத்துவர் தாயொருவரின் பெயரை மாற்றி, சிசுவொன்றை வேறு தரப்பினருக்கு வழங்குவதற்கு முயற்சித்தார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் நிருவாக அதிகாரியொருவர் இது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதுடன், போலி ஆவணத்தைத் தயாரித்து சிசுவை வேறு தரப்பிற்கு சட்டரீதியற்ற முறையில் வழங்குவதற்கு சந்தேகத்திற்குரிய மருத்துவர் செயற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts