பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் பணிபுரியும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. “எங்கள் சேவை மக்களுக்காக”, “மக்களுக்காக சேவையாற்றி நாங்கள் நடுத்தெருவில்” உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்தியவாறு யாழ். மாவட்ட சுகாதார அலுவலகத்தினை சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பிராந்திய சுகாதார பணிமனையின் முன்னால் இந்த வீதி மறியல் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த குடும்ப நல உத்தியோகத்தர்கள்,
“1997ஆம் ஆண்டு தொடக்கம் எவ்வித ஊதியமுமின்றி கடமையாற்றி வந்த எங்களை, கல்வித் தகமையைக் காரணங்காட்டி நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இந்த கஷ்டமான காலப்பகுதியில் பணியாற்றிய எங்களை சேவைக்கால அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்” என்றனர்.