Ad Widget

பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச் சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.

தாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் இந்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றில் அந்த ஹோட்டல் உரிமையாளர் எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார்.

ஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி தாவீது ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காணி உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர், பொலிஸாரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து தனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர் காணி வேலியருகில் சென்ற போது , அங்கு சிவில் உடையில் வந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி உரிமையாளரை தாக்கியதாக அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

தடுக்க சென்ற அவரின் மகனையும் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். காணி உரிமையாளரின் மனைவி கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது தள்ளி விழுத்தி கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

காணி உரிமையாளரின் மனைவியை பொலிஸார் தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது, அவரது வயிற்றில் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர்.

இதனால், சிறுமிக்கு இரத்தப் பேக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து காணி உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி உள்பட வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் காணி உரிமையாளர் பே.வசந்தகுமார் (வயது 42) பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிள்ளைகளான கிருபாகரன் (வயது 16), சர்மிளா (வயது 14) ஆகியோரும் பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரின் மனைவி மாங்குளம் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போதும் அவர்கள் நீண்ட நேரம் இழுதடித்துடித்துவிட்டு முறைப்பாட்டை பதிவு செய்யாத பின்னர் திருப்பி அனுப்பினர்.

இதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுள்ளதாக காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

“வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ்மொழி மூலமான முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்.

கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான முறைப்பாடு என்பதால் தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என பொலிஸார் இழுத்தடிக்கின்றனர்.

இதனால் அச்சத்துடனேயே நேரத்தை கழிக்க வேண்டியுள்ளது” என்று காணி உரிமையாளரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் காணி உரிமையாளரின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts