Ad Widget

குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசம்: 6 பேர் கைது

வவுனியா வடக்கு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் குடிபோதையில் ஆசிரியர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆறு ஆசிரியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி மகாவித்தியாலய விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 6 பேர் குடிபோதையில் அப்பாடசாலையின் அதிபரின் அறையை உடைத்துள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் உள்ள வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில் காலையில் பாடசாலைக்கு சென்ற அதிபர் பாடசாலையில் நடந்த சம்பவங்களை பார்வையிட்ட போது காவலாளியினால் நடந்த சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிபரினால் வலய கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அவரால் உத்திரவிடப்பட்ட நிலையில் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 6 ஆசிரியர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நேற்று வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிமன்றத்தால் குறித்த ஆறு ஆசிரியர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ் ஆசிரியர்களை வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளரே பிணையில் எடுப்பதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டு அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக வலய கல்விப்பணிப்பாளாரிடம் கேட்டபோது, ஆசிரியர்களை பிணையில் எடுப்பதற்கு கையொப்பத்தை தான் இடவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, வடமாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பாடசாலையாக இப்பாடசாலை காணப்படுவதால் வடமாகாண கல்வி அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஆவன செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts