Ad Widget

கிழக்குப் பல்கலை மாணவன் மீதான இனவெறித் தாக்குதலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(24-05-2016) கிழக்குப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட 1ம் வருடத்தில் கல்வி பயிலும் இலட்சியமுர்த்தி சுமேஸ்காந்த் என்ற மாணவர் மீது சிங்கள மாணவர்கள் கண்முடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த குறித்த மாணவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த யுத்த காலத்தில் வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் இன அழிப்புக்கு உள்ளான மக்களை நினைவுகூரும் செயற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் ஈடுபட்டமைக்காகவே சிங்கள மாணவர்களால் இத்தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலீசாருக்கு பாதிக்கப்பட்ட மாணவர் முறைப்பாடு செய்து 48 மணி நேரம் கடந்துள்ளபோதும், தற்போது வரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மாணவரை அச்சுறுத்தி முறைப்பாட்டை மீளப் பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உளவுத்துறையும் பொலிசாரும் உடந்தையாக இருந்துள்ளர்களா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போதய ஆட்சியிலும் தமிழ்கள் என்ற காரணத்திற்காக அரச இயந்திரங்களினால் பாரபட்சமாக நடாத்தப்படும் நிலை தொடர்கின்றது. தமிழ் மக்களுக்கும் ஆயுதப்படைகள், மற்றும் பொலீசாருக்குமிடையிலான முரண்பாடுகள் அல்லது தமிழ் சமூகத்திற்கும் சிங்கள சமூகத்திற்குமான முரண்பாடுகள் என்று வரும்போது, பாதிக்கப்பட்ட தமிழர்கள் பொலீசாரிடம் முறைப்பாடு செய்ய முற்பட்டால் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுப்பது அல்லது முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டாலும் நடடிக்கை எடுக்காமல் இருப்பது, அல்லது முறைப்பாட்டாளரை அச்சுறுத்தி முறைப்பாட்டை மீளப்பெற முயற்சிப்பது என்ற அணுகுமுறையானது ராஜபக்ச ஆட்சியில் மட்டுமல்ல தற்போதய அரசிலும் தொடர்கின்றது.

போர் வெற்றிவிழா நிறுத்தப்பட்டு நல்லிணக்கச் செயற்பாடுகள் நடைபெறுவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நாடகம் ஒருபுறம் நடைபெற்றாலும் மறுபுறத்தில் ஆட்சியாளர்களதும், சிங்கள அரச இயந்திரத்தினதும் போர் வெற்றி மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

மேற்படி மாணவன் மீதான தாக்குதல் சம்பவத்தினையும், பாதிக்கப்பட்ட மாணவன் தொடர்பில் பொலீசாரது பாராபட்சமான அணுகுமுறையையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts