Ad Widget

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் பணி வடமாகாணத்தில் ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றா நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா தொற்று நோயின் பரவல் காரணமாக தொற்றா நோய்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் தமக்குரிய மருந்துகளை கிரமமாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனைத் தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சு அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து பொலிஸாரின் உதவியுடன் அரச வைத்தியசாலைகளில் பதிவு செய்துள்ள தொற்றா நோயாளர்களுக்கான மருந்து வகைகளை தபால் திணைக்களத்தின் உதவியுடன் அவர்களது வீட்டிற்கு கொண்டு சென்று வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

எனவே வடமாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளின் சிகிச்சை நிலையங்களில் தொற்றா நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் தங்களுக்குரிய வைத்தியசாலைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அவர்களுடைய சரியான பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பதிவு செய்யப்பட்ட சிகிச்சை நிலைய இலக்கம் (கிளினிக் இலக்கம்) என்பவற்றை அறிவித்து தமக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள பேவண்டும்.

வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளுக்குமுரிய தொலைபேசி இலக்கங்களை பின்வரும் வழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கம் 021 222 6666

வடமாகாண சபையின் இணையத்தளம் www.np.gov.lk
வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் முகநூல் (முகவரி COVID 19, PDHS, NP)

குறிப்பு: மேற்குறிப்பிட்ட வழிமுறைகளினுடாக தங்களுடைய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதாவது சிரமங்கள் ஏற்படின் அவசர தொலைபேசி இலக்கத்துடன் (021 222 6666) தொடர்பு கொள்ளவும் – என்றுள்ளது.

Related Posts