Ad Widget

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை நியமிக்க அனுமதி

இலங்கை மருத்துவ சபை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு உள்ளகப்பயிற்சி மருத்துவர்களை நியமிப்பதற்கான அனுமதியினை மத்திய சுகாதார அமைச்சுக்கு கடந்த வாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாணத்தில் தற்போது யாழ்போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்காக (Internship) நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மருத்துவர்களது உள்ளகப் பயிற்சிக்கான முதலாவது அணி கிளிநொச்சி மாவட்டப்பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்படலாம் எனத்தெரியவருகிறது.

குறித்த வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சையினை வழங்குவதற்கான மருத்துவ மற்றும் ஆளணி வசதிகள் காணப்படுவதாக இலங்கை மருத்துவசபை திருப்தியடைந்தால் மட்டுமே உள்ளக மருத்துவப் பயிலுனர்களுக்கான நியமன அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உள்ளகப் பயிற்சி மருத்துவர்களை கிளிநொச்சி மாவட்டப் பொதுவைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர்களான மருத்துவர் நிசாதிரணசிங்கே மற்றும் வைத்திய கலாநிதி சரவணபவன் ஆகியோர்மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண மருத்துவ பீடாதிபதி வைத்திய கலாநிதி ரவிராஜ் அவர்களும் மற்றும் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி தன்ராஜ் அவர்களும் இலங்கை மருத்துசபையுடன் இது தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்திருந்தனர்.

Related Posts